"பெரிய நியூஸ் வரும்" என எச்சரித்த ஐஎஸ்... ஜகார்த்தாவை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்.. 7 பேர் பலி
ஜகார்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். நகரமே போர்க்களம் போலக் காணப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஏற்கனவே எச்சரித்திருந்ததாக கூறப்படுவதால் அந்த அமைப்பினரே தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்கொலைப் படைத் தாக்குதலோடு, குண்டுவெடிப்புகளையும் தீவிரவாதிகள் நடத்தியதால் தலைநகரமே போர்க்களம் போலக் காணப்பட்டது. அதிபர் மாளிகை மற்றும் ஐ.நா. அலுவலகங்களுக்கு அருகே இந்த சம்பவங்கள் நடந்தன.
அதிபரின் மாளிகைக்கு அருகே உள்ள சரீனா ஷாப்பிங் மையத்திற்கு வெளியே முதலில் சில குண்டுகள் வெடித்தன. அதேபோல ஐ.நா. அலுவலகம் அருகேயும் குண்டுகள் வெடித்தன. மேலும் இரு தற்கொலைப் படைத் தீவிரவாதிகளும் தங்களது உடலில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
சரமாரியான துப்பாக்கிச் சூடு
ஐ.நா. அதிகாரி ஜெரீமி டக்ளஸ் பிபிசிக்கு அளித்து பேட்டியில், தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. துப்பாக்கி்ச் சத்தம் இடைவிடாமல் கேட்கிறது என்று கூறினார்.
ஐஎஸ் காரணமா
யார் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று தெரியவில்லை. இது தீவிரவாதத் தாக்குதல் என்று அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், எந்த அமைப்பும் இதற்குப் பொறுப்பேற்கவில்ல என்றும் கூறியுள்ளது.
நாடு முழுவதும் உஷார் நிலை
இந்தோனேசியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவது புதிதல்ல என்பதால் நாடு முழுதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
7 பேர் பலி
இந்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர்களில் யாரும் பாதுகாப்புப் படையினர் சுட்டுப் பலியானதாக தெரியவில்லை. தற்கொலைப் படைத் தீவிரவாதிகளின் உடல் சிதறல்களைப் போலீஸார் சேகரித்துள்ளனர்.
"கச்சேரி" நடக்கும் என எச்சரித்த ஐஎஸ்ஐஎஸ்
தேசிய போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் சர்லியான் கூறுகையில், இது தீவிரவாதச் செயல். இந்தத் தாக்குதலுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தரப்பிலிருந்து மிரட்டல் வந்திருந்தது. தற்போது இதற்கு அதுதான் காரணமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்தோனேசியாவில் மிகப் பெரிய கச்சேரி நடக்கும். அது சர்வதேச அளவில் செய்தியாகும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அது இதுவா என்று தெரியவில்லை என்றார்.
4 பேர் பொதுமக்கள்
இதற்கிடையே கொல்லப்பட்டவர்களில் 3 பேர் போலீஸார் என்றும் நான்கு பேர் அப்பாவி மக்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
பயமின்றி சரமாரியாக சுட்ட தீவிவாதிகள்
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சற்றும் பயம் இல்லாமல் தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். மோட்டார் சைக்கிள்களில் வந்தும், கையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி நடந்தும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்தோனேசிய அதிபர் கண்டனம்
தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.
மலேசியா உஷார்
இதற்கிடையே, இந்தோனேசியத் தாக்குதலைத் தொடர்ந்து மலேசியாவில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய தேசிய போலீஸ் தலைவர் கலீத் அபுபக்கர் தெரிவித்துள்ளார். பொது இடங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.