இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்தது இங்கிலாந்து ஹைகோர்ட்
லண்டன்: தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்த தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மனுவை இங்கிலாந்து உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவில் வங்கிகளிடம் ரூ9,000 கோடி கடன் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்தவர் விஜய் மல்லையா. மேலும் இந்தியாவை விட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் பதுங்கி உள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து விஜய் மல்லையாவை திருப்ப அனுப்ப இந்தியா கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்தியாவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது. இதற்கு எதிராக விஜய் மல்லையா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த இங்கிலாந்து உயர்நீதிமன்றம், விஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. தற்போது இந்த வழக்கில் இங்கிலாந்து உள்துறை செயலாளரான இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீதி பட்டேல் இறுதி முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.