பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்.. எதுக்கு தெரியுமா?
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன்: வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் பேஸ்புக் பயன்படுத்த துவங்கி விட்டனர். அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றும் போது தவறான தகவல்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக பேஸ்புக் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.
இதுதொடர்பான புகாரை விசாரித்து வந்த ஐரோப்பிய யூனியன், பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 773 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நிறுவனங்கள் கைப்பற்றப்படும் போது ஏற்படும் போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையே வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், கடந்த 2014 ஆம் ஆண்டு நாங்கள் பதிவு செய்த தகவல்களில் சில தவறுகள் தெரியாமல் நடந்துவிட்டன எனக் குறிப்பிட்டுள்ளது.