'பாவம்... அவர்களை வாழ விடுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட்..!' - ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்
பலோ அல்டோ(யு.எஸ்): ஃபேஸ்புக் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் சக்கர்பர்க், அதிபர் ட்ரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார். குழந்தைகளாக அமெரிககாவுக்குள் வந்தவர்களுக்கு ஒபாமா ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகைகளைத் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டபூர்வமற்ற முறையில் குடியேறிவர்களுக்கு , அங்கீகாரம் வழங்கலாமா,குடியுரிமை கொடுக்கலாமா போன்ற அரசியல் கட்சியின் விவாதங்கள், மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக தொடர்ந்து இருந்து வருகிறது.
ஓபாமா ஆட்சியில் இருக்கும்போது, பெற்றோர்களுடன் வந்த குழந்தைகள் என்ன தவறு
செய்தார்கள்? பெற்றோர்கள் அமெரிக்காவுக்குள் சட்டபூர்வமற்ற முறையில் வந்தாலும்,
குழந்தைகள் அந்த தவறுக்கு எப்படி பொறுப்பேற்க முடியும் என்ற வாதங்களை முன் வைத்து, அவர்களுக்கு சட்டப்படி தங்குவதற்கும் வேலை செய்ய அனுமதியும் வழங்கினார்.
DACA என்று சுருக்கமாக அழைக்கப்படும் சட்டத்தை ஒபாமா அவரது அதிபர்அதிகார எல்லைக்குட்பட்டு, அமல்படுத்தினார். அதன் மூலம் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலனடைகிறார்கள். தற்போதைய அதிபர், சட்டபூர்வமற்ற முறையில் இனி யாரும் அமெரிக்காவுக்குள் வரக்கூடாது என்று, கடுமையான சட்டங்களை அமல் படுத்துவதில் குறியாக இருக்கிறார்.
லத்தீன் இனத்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட சிறுபான்மையினர் , ட்ரம்பின் புதிய சட்டம் தங்களுக்கு பாதகமாக இருக்குமோ என்று ஒரு வித அச்சத்தில் இருக்கிறார்கள். DACA பயனாளிகளும், ட்ரம்ப் தங்கள் சலுகைகளை பறித்துவிடுவாரோ என்று அஞ்சுகின்றனர்.
களத்தில் இறங்கும் மார்க் சக்கர்பர்க்..
இந் நிலையில், ஃபேஸ்புக் மூலம் மார்க் சக்கர்பெர்க் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மற்ற அனைவரைப் போல் நானும், அதிபர் ட்ரம்பின் புதிய சட்டத்தைப் பார்த்து கவலை அடைகிறேன்.
என்னுடைய தாத்தா குடும்பம் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து நாடுகளிலிருந்து வந்தவர்கள். மனைவி ப்ரிசில்லாவின் பெற்றோர்கள் சீனா மற்றும் வியட்நாம் அகதிகளாக வந்தவர்கள், சில தசாப்தங்களுக்கு முன்னால் அகதிகள் வருவதை அமெரிக்கா தடுத்து இருந்தால், ப்ரிசில்லாவின் குடும்பம் இங்கு இருந்திருக்காது.
இந்த நாட்டை நாம் பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதே நேரம், பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக இருப்பவர்களைத் தான் நாம் குறிவைத்து பிடிக்க வேண்டும்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் சட்டபூர்வமற்ற முறையில் குடியேறிவர்களை தொந்தரவு செய்யக் கூடாது. அது நமது மனித வளத்தையும், பொருளாதார வளத்தையும் வீணாக்கும் செயலாகத்தான் இருக்கும். மேலும் அத்தகைய நடவடிக்கைகள் ஏனைய அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடும்.
இருப்பினும், அதிபர் ட்ரம்ப் DACA பயனாளிகளுக்கு ஏதாவது செய்வேன் என்று கூறி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்குவதற்கும், வேலை செய்வதற்கும் அதிபரின் ஆட்சிக்குழு தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.
'திறமை மிக்கவர்கள் இங்கு வந்து நிரந்தரமாக குடியேறுவது அமெரிக்காவுக்கு பலன் அளிக்கும் என்ற அதிபரின் நம்பிக்கை, மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார்
அரசியலும் பண்ணுவோம்...
மார்க் சக்கர்பெர்க் FWD.US என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராவார். சட்டபூர்வமற்ற முறையில் குடியேறியவர்களுக்கும், அகதிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டு இயங்கும் இந்த அமைப்புக்கு, நாடெங்கும் பல கிளை அலுவலங்கள் உள்ளன. பில் கேட்ஸ்சும் இந்த அமைப்பின் மற்றொரு நிறுவனர் ஆவார்.
FWD.US அமைப்பின் ஆறு முக்கிய கொள்கைகளில் அரசியலும் பண்ணுவோம் என்பதும்
ஒன்றாகும். 'கிளை அலுவலங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக பாதிக்கப்படும் மக்களுக்காக வாதாடி வருகிறோம். அரசியலில் ஈடுபடுவது என்பது அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை. அரசியலை விட்டு வெளியே வந்துவிடுவோம் என்று பெருமாலான நேரங்களில் தோன்றும். ஆனாலும் பிரச்சனைகளை சரிசெய்வதற்கு , அரசியலையும் அரசியல்வாதிகளையும் விட்டு விலகி இருப்பது சரியான வழியல்ல' என்று அந்த கொள்கை கூறுகிறது.
கடந்த அதிபர் தேர்தலில் ஹிலரி க்ளிண்டனை ஆதரித்து, ஜனநாயகக் கட்சி அமைப்புகளுக்கு 20 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்திருந்தார் மார்க். ட்ரம்பின் கொள்கைகளை வெளிப்படையாக கடுமையாக சாடியும் இருந்தார். தற்போது ட்ரம்ப் அதிபராகிவிட்ட நிலையில் அவருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், தனது குடியுரிமை மற்றும் அகதிகள் நிலைப்பாட்டிற்கு ட்ரம்பிடமே , கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுக்கிறார்.
மார்க்கின் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் சமூக வலைத் தளங்கள் மூலமான தகவல் பரிமாற்றத்தின் மூலமாக தமிழகத்தில் பெரிய எழுச்சி உண்டான நிலையில், அரசியல்வாதிகளை உடன் சேர்க்க மாட்டோம் என்ற இளைஞர்களின் நிலைப்பாட்டை நினைவு கூற வேண்டியதுள்ளது.
தனது நேரெதிர் கொள்கை கொண்டவரும், கடுமையாக எதிர்த்துப் போராடியவருமான தற்போதைய அதிபர் ட்ரம்பை ஒதுக்கி வைக்காமல், அவர் மூலமாகவே தனது கோரிக்கைக்களை நிறைவேற்ற முயலும் மார்க்கின் அரசியல் சாமர்த்தியத்தை, மெரினா புரட்சி இளைஞர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
-இர தினகர்