இணையதளங்கள் மீது 'சைபர்' போர் தொடுக்கும் வடகொரியா.. தனி ஆளாக சமாளிக்கும் பேஸ்புக்!
உலகில் இருக்கும் முக்கிய அமெரிக்க இணையதளங்கள் மீது வடகொரியா சைபர் போர் தொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நியூயார்க்: உலகில் இருக்கும் முக்கிய அமெரிக்க இணையதளங்கள் மீது வடகொரியா சைபர் போர் தொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வடகொரியா தலைநகரான 'பியாங்யாங்' தான் இந்த சைபர் கிரைம் பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது.
சோனி நிறுவனம் ஹேக் செய்யப்பட்டதற்கும் மைரோசாப்ட் நிறுவன இணையதளங்களில் சில பிரச்சனைகள் வந்ததற்கும் கூட வடகொரியாதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. உலகில் இருக்கும் பல முக்கிய ஹேக்கிங் குழுக்களை எல்லாம் வடகொரியா தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது என அமெரிக்கா கூறிவருகிறது.
தற்போது இந்த ஹேக்கிங் இயக்கங்களுக்கு எதிராக பேஸ்புக் களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக பேஸ்புக் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்த உள்ளது.
சோனியும் மைரோசாப்ட்டும்
சில மாதங்களுக்கு முன்பு பிரபல சோனி நிறுவனத்தின் இணையத்தளமும், கிளவுட் சேமிப்பு தளமும் ஹேக்கர்களால் திருடப்பட்டது. அதன்பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில பக்கங்களும் ஹேக்கர்களால் திருடப்பட்டது. இதனால் பல முக்கிய தகவல்களும், புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தது. இதற்கு பின்னால் 'லாசரஸ்' என்ற ஹேக்கிங் இயக்கம் இருக்கிறது. அதேபோல் 'வன்னா க்ரை' என்ற இயக்கமும் இருப்பதாக கூறப்பட்டது.
மீண்டு வந்து கொண்டு இருக்கிறது
இந்த தாக்குதலில் இருந்து சோனி நிறுவனம் இன்னும் வெளியே வரவில்லை. பல முக்கிய தகவல்களை இன்னும் திரும்ப பெற முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது இதில் இருந்து கொஞ்சம் மீண்டு வந்து இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மொத்தமாக இதில் இருந்து மீள முடியும் என்று இந்த நிறுவனங்கள் தெரிவித்து இருக்கிறது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு
இந்த இணையதள ஹேக்கிங் இயங்கங்களை பின்னால் இருந்து இயக்குவது வடகொரியாதான் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதற்காக வடகொரியா தலைநகரில் நிறைய இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான டாம் போஸார்ட் கூறும் போது ''இதுவரை நடந்த சைபர் தாக்குதலுக்கு பின்பாக வடகொரியாதான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை அவர்கள் மறுத்தாலும் அதுதான் உண்மை'' என்று குறிப்பிட்டார்.
களம் இறங்கியது
வடகொரியா தொடங்கி இருக்கும் இந்த சைபர் போரை முடிப்பதற்காக பேஸ்புக் சில புதிய திட்டங்களை தீட்டி இருக்கிறது. அதன்படி வடகொரியாவில் இருந்து இயங்கும் அனைத்து தளங்களையும் கண்காணிக்க தொடங்கி உள்ளது . ஏற்கனவே பேஸ்புக் மீது செய்யப்பட இருந்த சைபர் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தற்போது இதனால் பேஸ்புக் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மொத்தமாக வடகொரியா ஹேக்கிங் குழுக்களை அழிக்க முடிவு செய்துள்ளது.