பேஸ்புக்கின் ஆளில்லா விமானம் வானில் பறந்து வெற்றி.. இனி தொலைதூரத்திற்கும் இணைய சேவை
பேஸ்புக் நிறுவனத்தின் அக்யூலா என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் வானில் பறந்து சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அரிசோனா: தொலை தூரத்திற்கும் இணைய சேவை அளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் ஆளில்லா விமானத்தை வானில் இயக்கி வெற்றி பெற்றுள்ளது.
'அக்யூலா' என்று அழைக்கப்படும் இந்த ஆளில்லா விமானம் அரிசோனாவில் ஒரு மணி 46 நிமிடங்கள் வானில் பறந்தது. இது பேஸ்புக் நிறுவனத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த ஆளில்லா விமானம் 60,000 அடி உயரத்தில் பறக்க விட வேண்டும் என்பது பேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோள். ஆனால் 3000 அடி உயரத்தில் மட்டுமே பறந்துள்ளது. என்றாலும் சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் பரிமாற்றம்
இந்த ஆளில்லா விமானம் சூரிய ஒளி மூலம் இயங்குகிறது என்பது கூடுதல் செய்தி. இந்த விமானங்கள் பல மாதங்களுக்கு வானில் நிலை நிறுத்தப்பட்டு லேசர் மூலமாக ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
முதல் சோதனை தோல்வி
அக்யூலா விமானத்தை பறக்க விட்டு சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது கடந்த மே மாதம் என்றாலும் பேஸ்புக் நிறுவனம் தற்போதுதான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற முதல் சோதனை தோல்வி அடைந்ததால், இந்த விமான சோதனை ஓட்டத்தை தாமதமாக தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதிய தொழில்நுட்பம்
மேலும், முதல் முறை ஏற்பட்ட தோல்வி போன்று இந்த முறை ஏற்படாமல் இருக்க பேஸ்புக் தொழில்நுட்ப குழுவினர், சிறப்பு மென்பொருள்களை பயன்படுத்தியுள்ளனர். இதனால் இரண்டாவது முறையும் தோல்வி ஏற்படாமல் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.
தொலைத் தூரத்திற்கு இனி இணையம்
போயிங் 737 விமானத்தின் இறக்கைகளின் நீளத்தைப் போன்று 'அக்யூலா' ஆளில்லா விமானத்தின் இறக்கையும் நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு உலகம் முழுவதும் இணைய சேவை அளிக்க வேண்டும் என்ற பேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோள் நிறைவேறும் தருவாயில் உள்ளது.