எல்லாம் போய்விட்டது.. பேஸ்புக்கால் நஷ்டம்.. மொத்தமாக மூடப்படுகிறது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா!
பேஸ்புக் மூலம் மக்களிடம் தகவல் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் தற்போது மொத்தமாக மூடப்படுகிறது.
Recommended Video
லண்டன்: பேஸ்புக் மூலம் மக்களிடம் தகவல் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் தற்போது மொத்தமாக மூடப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் பெரிய திட்டமிடலும், தொழில்நுட்ப பலமும் இருக்கிறது.இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது.
யார் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். தேர்தல் ஆலோசனை மையம் என்ற பெயரின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. உலகம் முழுக்க தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனைகளை வழங்கி, வெற்றி பெற வழிகாட்டி வருகிறது. இவர்கள் பேஸ்புக் மூலம் பல கோடி மக்களின் தகவல்களை திருடி இருக்கிறார்கள். தேர்தல் சமயங்களில் அந்த தகவலை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்கள்.
மோசமான விளம்பரம்
இவர்களுக்கு கிடைத்த மோசமான விளம்பரம் காரணமாகவே தற்போது நிறுவனத்தை மூடுவதாக கூறியுள்ளனர். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனாலும் எங்கள் மீது இருந்த மதிப்பு சென்றுவிட்டது. இனி நாங்கள் மீடியா உலகிலும், விளம்பர உலகிலும் செயலாற்ற முடியாது. அதனால் மொத்தமாக இந்த நிறுவனத்தை மூடுகிறோம் என்று கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா கூறியுள்ளார்.
90 சதவிகிதம் கஷ்டமர்கள்
இந்த தொடர் பிரச்சனை காரணமாக அந்த நிறுவனத்தின் 90 சதவிகித கஷ்டமர்கள் அந்த நிறுவனத்தை விட்டு சென்று இருக்கிறார்கள். அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட போதில் இருந்து நம்பகத்தன்மையுடன் நிறுவனத்தில் இருந்தவர்களும் நிறுவனத்தைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். அதேபோல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முக்கியமான ஊழியர்களும் நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
நிறுவனத்தை மூடுகிறோம்
இந்த நிலையில்தான் தற்போது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா, தங்கள் நிறுவனத்தின் கஷ்டமர்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதன்படி நிறுவனத்தை மொத்தமாக மூடுவதாக கூறியுள்ளது. அதோடு நிறுவனத்தின் பங்குகளை மொத்தமாக திரும்ப பெற்றுக்கொண்டு, நிறுவனத்தை மூடப்போவதாக கூறியுள்ளது. ஏற்கனவே 90 சதவிகித கஷ்டமர்களை இழந்த போதிலும், மீதம் இருக்கும் 10 சதவிகித கஷ்டமர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.