பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் மோடி! சோஷியல் மீடியாவின் சக்தி பற்றி புகழாரம்
சிலிக்கான்வேலி: இந்தியா தற்போது 8 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடு. அதை 20 டிரில்லியனாக உயர்த்த வேண்டும் என்பது எனது கனவு என்று பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பேஸ்புக் தலைமை அலுவலகம் சென்ற மோடி, டவுன்ஹாலில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மோடி கூறியதாவது: உலகையே இணைக்கும் ஒரு இடத்தில் (பேஸ்புக்) நான் இப்போது நிற்பது பெருமையளிக்கிறது.
நான் சோஷியல் மீடியாவில் என்னை இணைத்தபோது, நான் பிரதமராவேன் என நினைத்து பார்க்கவில்லை. ஆனால் ஆர்வத்தால் சேர்ந்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும், சீனாவின் சோஷியல் நெட்வொர்க் முற்றிலும் மாறுபட்டது (அரங்கத்தில் சிரிப்பலை). ஆனால், அதிலும் நான் உறுப்பினராகியுள்ளேன் (மோடி சிரிப்பு). சீன மொழியில் கருத்து பரிமாறுகிறேன்.
எண்ண ஓட்டங்களை மாற்றுவதில் சோஷியல் மீடியா பங்களிப்பு அபாரமானது. முன்பெல்லாம், டெல்லிக்கும்-வாஷிங்டன்னுக்கும் ராஜாங்க உறவு இருந்தது. இப்போது, இவ்விரு நகர மக்களுக்கு நடுவே ராஜாங்க உறவு உள்ளது. காரணம், சமூக வலைத்தளங்கள்.
நான் இஸ்ரேல் பிரதமருக்கு ஹீப்ரு மொழியில் வாழ்த்து சொன்னேன், அவர் ஹிந்தியில் எனக்கு வாழ்த்தனுப்பினார். இதுதான் சோஷியல் மீடியாவின் சக்தி.
இந்தியா தற்போது 8 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடு. அதை 20 டிரில்லியனாக உயர்த்த வேண்டும் என்பது எனது கனவு.
உலகிலேயே மிக வேகமாக பொருளாதா வளர்ச்சி பெறும் நாடு தற்போது இந்தியா மட்டுமே. இவ்வாறு மோடி பேசினார்.
முன்னதாக பேசிய பேஸ்புக் தலைவர் மார்க் ஜுகர்பெர்க், இந்தியா பற்றி தனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்றும், இந்திய பிரதமர், சோஷியல் மீடியா மூலமாக, மக்களை தொடர்பு கொள்வதை பார்த்து வியப்பதாகவும் தெரிவித்தார்.
மோடியிடம் கேட்பதற்காக சுமார் 40 ஆயிரம் கேள்விகள் வந்துள்ளதாக பேஸ்புக் வட்டாரங்கள் கூறுகின்றன.