உங்களது கணக்கு விபரம் திருடப்பட்டதா.. எல்லோருக்கும் தனியாக தகவல் அனுப்ப போகும் பேஸ்புக்!
பேஸ்புக் மூலம் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று இன்று விபரம் வெளியிடப்பட உள்ளது.
நியூயார்க்: பேஸ்புக் மூலம் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று இன்று விபரம் வெளியிடப்பட உள்ளது. எல்லோருடைய பேஸ்புக் பக்கத்திற்கும் இந்த விபரம் தனித்தனியாக அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று அனுப்பும்
இந்த நிலையில் பேஸ்புக், மக்களின் பல்வேறு சந்தேகங்களை தீர்க்க முடிவு செய்து இருக்கிறது. முதல்படியாக, பேஸ்புக்கில் யாருடைய தகவல்கள் எல்லாம் திருடப்பட்டு இருக்கிறதோ, அவர்களுக்கு எல்லாம் இன்று மற்றும் நாளை பேஸ்புக் மெசேஜ் அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது. என்ன மாதிரியான தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது என்று பேஸ்புக் அவர்களிடம் கூறும்.
அதிகம்
இதில் அமெரிக்காவில்தான் அதிக நபர்களிடம் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. அதனால் அந்நாட்டு பேஸ்புக் பயனாளிகளுக்கு இந்த மெசேஜ் அதிகம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் 5.6 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கும் இந்த தகவல் மெசேஜ்கள் அனுப்பப்படும்.
எல்லோருக்கும்
இந்த மெசேஜ் இல்லாமல் மற்ற நபர்களுக்கு வேறு ஒரு மெசேஜ் இன்று அனுப்பப்படும் என்று பேஸ்புக் கூறியுள்ளது. அதன்படி என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது என்று பேஸ்புக் அதன் பயனாளிகளுக்கு விளக்க உள்ளது. எந்த விதங்களில் இனி தகவல் திருட போக வாய்ப்பு இருக்கிறது, அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று பேஸ்புக் விளக்கம் கொடுக்க உள்ளது.
ஏன் இப்படி
இதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. பேஸ்புக்கில் தகவல் திருட்டு பிரச்சனை வந்த சில நாளில் அதன் நிறுவனர் மார்க் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் உலக டெக் வல்லுநர்கள் அவர் மீது பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர்களை அமைதிப்படுத்த மார்க் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.