தோல்வி அடைந்த பாக். பிளான்.. பொங்கி எழுந்த இந்தியா.. 2 இந்திய அதிகாரிகளும் விடுதலை.. என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: இந்தியாவின் கடுமையான எதிர்வினை மற்றும் ராஜாங்க ரீதியான அழுத்தம் காரணமாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் தற்போது காஷ்மீர் எல்லையில் கடந்த ஒரு மாதமாக அத்துமீறி வருகிறது. அங்கு அடிக்கடி அத்துமீறி ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் இருக்கும் இந்திய அதிகாரிகளையும் அந்த நாடு குறி வைத்து உள்ளது.
அந்த வகையில் நேற்று காலை பாகிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தானில் உள்ள இந்திய வெளியுறவுத்துறையின் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆவர்.
பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய தூதரக அதிகாரிகளின் உடலில் படுகாயங்கள்
காணாமல் போனார்
இவர்கள் நேற்று அதிகாலை காணாமல் போனார்கள். அரசு வாகனத்தோடு பணி நிமித்தமாக வெளியே சென்ற இவர்கள் காணாமல் போனார்கள். இதையடுத்து இவர்களை தேடும் பணி தொடங்கியது. நேற்று மதியம் வரை அரசு இவர்களை தீவிரமாக தேடியது. இந்த நிலையில், நேற்று மதியம் இவர்கள் பாகிஸ்தான் போலீஸ் மூலம் கைது செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏன் கைது
இவர்கள் இருவரும் வாகனத்தை வைத்து ஒரு இடத்தில் விபத்து ஏற்படுத்தினார்கள் என்று பொய்யான புகார் அளித்து கைது செய்யப்பட்டனர். அதே சமயம் இவர்கள் கள்ள நோட்டு பயன்படுத்தினார்கள் என்று இன்னொரு பக்கம் கூறப்பட்டது. அதாவது இவர்களை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு போலீஸ் கைது செய்துள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறை ஐஎஸ்ஐயின் அழுத்தத்தின் பெயரில் இந்த கைது நடந்தது.
காரணம் என்ன
டெல்லியில் பணியாற்றிய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் சில நாட்களுக்கு முன் நாடு கடத்தப்பட்டனர். தூதரக அதிகாரிகள் என்ற பெயரில் நாட்டிற்குள் வந்த அபித் ஹூசைன், தாஹிர் கான் இருவரும் உளவு வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இருவரும் பாகிஸ்தானுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு இந்தியா மீது கோபத்தில் இருந்தது.
கோபத்தால் கைது
இதையடுத்து இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த கைது திட்டத்தை அரங்கேற்றியது. ஆனால் பாகிஸ்தான் போல இந்தியா கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை. இந்தியா உடனடியாக கடுமையான எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா கூறியது.
என்ன ஒப்பந்தம்
அதேபோல் ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, இந்திய அதிகாரிகளை கைது செய்யும் அல்லது விசாரிக்கும் உரிமை பாகிஸ்தான் அரசுக்கு கிடையாது. அவர்களை உடனே வெளியே விடவேண்டும். அவர்களின் முழுமையான பாதுகாப்பு மற்றும் உரிமை அனைத்திற்கும் பாகிஸ்தான்தான் பொறுப்பு. அவர்கள் இரண்டு பேர், அவர்களின் கார் இரண்டும் உடனடியாக இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இந்தியா தெரிவித்தது.
விடுதலை செய்தது
அதோடு பாகிஸ்தானுக்கு வேறு வகையில் ராஜாங்க ரீதியில் இந்தியா அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய அதிகாரிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று இரவு இந்திய தூதரகம் வந்துள்ளனர் என்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சனை இன்றுதான் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.