போ போ எல்லாப் பேரும் பெயிலு.... டல்லாஸில் "டர்ரை"க் கிளப்பிய வாத்தியார்!
டல்லாஸ்: தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், தேர்வில் மோசடி செய்ததாகவும் கூறி வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களையும் பெயில் ஆக்கியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ & எம் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பேராசிரியராக உள்ள இர்வின் ஹார்விட்ஸ், தனது வகுப்பில் உள்ள 30 மாணவர்களுக்கு சமீபத்தில் மின் அஞ்சல் ஒன்றை அனுப்பினார்.
அதில் நீங்கள் எனக்கு கொடுத்த தொல்லை தாங்கமுடியாத அளவிற்கு சென்றுவிட்டதற்காகவும், தேர்வில் மோசடி செய்ததற்காவும் உங்கள் அனைவரையும் பெயில் போடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "எனது கருத்துப்படி பெருமை வாய்ந்த இந்த பல்கலைகழகத்தில் இருந்து பட்டம் பெற்று செல்ல தேவையான எந்த தகுதியும் உங்கள் யாருக்கும் இல்லை" என தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆனால் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தான் பெயில் போட முடியும் என பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.