தீவிரவாதத்திற்கு உதவியதால் கறுப்புப்பட்டியலில் பாக்.: சர்வதேச அமைப்பின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு
தீவிரவாதத்திற்கு நிதி ஒதுக்கும் நாடுகளின் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.
பாரிஸ்: தீவிரவாதத்திற்கு நிதி ஒதுக்கும் நாடுகளின் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.
நிதி நடவடிக்கை அதிரடிக் குழு என்ற சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு கடந்த 1989ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சர்வதேச அளவில் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பயங்கரவாதத்துக்கு வரும் நிதியுதவி உள்ளிட்டவை தொடர்பாக இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது.
இந்த குழுவின் கூட்டம் பாரிசில் கடந்த 24 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியதால், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
கறுப்புப்பட்டியலில் பாகிஸ்தான்
அதன்படி கடந்த 27-ம் தேதி முதல் பாகிஸ்தான் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 9வது இடத்தை பிடித்துள்ளது.
மற்ற 8 நாடுகள்
எத்தியோப்பியா, செர்பியா, இலங்கை, சிரியா, டிரினிடாட், டொபாகோ, துனிசியா, ஏமன் ஆகிய நாடுகளும் இந்த கறுப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு பரிந்துரை
மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியை தடுப்பது தொடர்பாக சர்வதேச நிதி கண்காணிப்பகம் ஒரு செயல் திட்டத்தை பாகிஸ்தானுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், அதனை பாகிஸ்தான் எப்படி செயல்படுத்துகிறது? என்பதை சில மாதங்கள் கழித்து ஆய்வு செய்யலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆச்சரியம் ஒன்றும் இல்லை
சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது. அதேநேரத்தில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பதில்
இது அரசியல் ரீதியிலான முடிவு என்றும் தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கையில் ஒன்றும் செய்யமுடியாது என்றும் தெரிவித்துள்ளது.