சீனாவில் வீட்டுப்பாடத்தை காப்பியடித்த 11 வயது மகளை அடித்துக் கொன்ற தந்தை
பெய்ஜிங்: சீனாவில் தோழியின் வீட்டுப்பாடத்தை காப்பியடித்து எழுதியதால் 11 வயது மகளை தந்தை அடித்துக் கொலை செய்துள்ளார்.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹாங்சூவைச் சேர்ந்த 11 வயது மாணவி தனது தோழியின் வீட்டுப்பாடத்தை காப்பியடித்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் தந்தை எப்படி நீ காப்பியடித்து எழுதலாம் என்று ஆத்திரப்பட்டார். இதையடுத்து அவர் 11 வயது மகளை முட்டியிட
வைத்து அவரது கைகளை கட்டுப்போட்டு அடித்தார்.
இதில் காயம் அடைந்த சிறுமி மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்தவர்கள் அவரின் கழுத்து, முதுகில் காயங்கள் இருப்பதை பார்த்தனர். மேலும் சிறுமி மூச்சுவிட முடியாமல் 5 நிமிடங்கள்
போராடியதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் சீனாவில் 10 வயது சிறுவனை அவரது மாற்றாந்தாய் அடித்து நொறுக்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.