உலகையே உலுக்கிய சிரிய குழந்தையின் மரணம்... தாய், சகோதரனுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்
கோபானி : சிரியாவில் இருந்து துருக்கி வழியாக கிரீஸ் நாட்டுக்கு அகதியாக சென்ற போது படகு கவிழ்ந்து பலியான குழந்தை ஐலன் உடல், அவனது தாய், சகோதரன் உடலுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புகுவதற்காக, லட்சக்கணக்கான அகதிகள் கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்களில் 23 பேர், கடந்த புதன் அன்று, துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டிற்கு இரு படகுகளில் சென்றனர். அதில் படகு கவிழ்ந்து 12 பேர் நடுக்கடலில் மூழ்கி மூச்சுத்திணறி, பலியாகினர். 9 பேர் மட்டுமே பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிழந்தவர்களின் ஒருவன் தான் மூன்றே வயதான ஐலன். அவனோடு சேர்ந்து அவன் தாயும் 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர். முன்னரே இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்திருந்தும் கூட தன் நாட்டிற்கு அகதிகளை அழைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் பிடியை இறுக்கியபடியே இருக்கிறார்கள் ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள்.
இந்த நிலையில், 3 வயது குழந்தையான ஐலன், கடற்கரை மணலில் முகம் புதைத்தபடி, வெறும் சடலமாகக் கிடக்கும் புகைப்படம், உலகின் மவுனத்தை அசைத்து பார்க்கத் துவங்கியுள்ளது. இங்குள்ள அகியர்லார் கடற்கரையில், கடந்த புதன்கிழமை காலை 6 மணியளவில் நிலுபர் டெமிர் என்ற பெண் புகைப்பட நிருபர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்த கொடூர சம்பவம் நடந்த துருக்கியின் போட்ரம் மாவட்டம், கடல் கடந்து வரும் அகதிகளின் சந்திப்பு புள்ளியாக உள்ளது.
இந்நிலையில் இறந்த மூவரின் உடலும், அவர்களது சொந்த ஊரான சிரியாவின் கொமானியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் சிறுவனின் தந்தை அப்துல்லா, தன் குடும்பத்தினரின் உடல்களைக் கண்டு கதறி அழுத காட்சி, இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
"என்னுடைய குடும்பத்தின் மரணம் அரபு நாடுகள் சிரிய அகதிகளை அரவணைக்கும்.. தஞ்சமடையும் அகதிகளின் உயிர் காக்கும் என்று நம்புகிறேன்."
இது தான் இறந்த குழந்தை ஐலனின் தந்தை ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்த கண்ணீர் வேண்டுகோள்.
இது எல்லை கடந்து தஞ்சமடையும் அகதிகளை கைது செய்யும் நாடுகளின் செவிகளுக்கு எட்டுமா?