பீட்சாவில் விஷம் வைத்து மகனை கொன்ற கொடூர தந்தைக்கு 20 ஆண்டு சிறை: அமெரிக்காவில் பரபரப்பு
நியூயார்க்: பீட்சாவில் எலி விஷத்தை கலந்து கொடுத்து பெற்ற மகனையே கொன்ற தந்தைக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ப்ராங்க்சில் வசித்து வருபவர் 49 வயதான லியானார்டோ எஸ்பினால். அவருக்கு ரோசாவ்ரா ஏப்ருவ் என்ற மனைவியும், மியா என்ற 7 வயது மகளும், ஸ்டுவர்ட் என்ற 5 வயது மகனும் உள்ளனர்.
தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட எஸ்பினால், தற்கொலை கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு மகள் மற்றும் மகனுக்கு விஷம் கொடுத்த பீட்சாவை கொடுத்துவிட்டு, தானும் விஷம் கலந்த பீட்சாவை சாப்பிட்டார்.
பீட்சா சாப்பிட்ட சில நிமிடங்களில் மகள் மியா வாந்தி எடுக்க, எஸ்பினால் தனது உயிரை போக்கிக்கொள்ள வேண்டும் என்ற கொடூர சிந்தனையுடன் மகன் ஸ்டுவர்டை அழைத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். அங்கே தண்ணீர் தொட்டியில் ஸ்டூவர்டை மூழ்கடித்தார்.
எஸ்பினாலின் வளர்ப்பு தாய் இருவரையும் பாத்ரூமிலிருந்து வெளியே வருமாறு கூறிய போதிலும், அதற்கு அவன் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து 911 அவசர காவல்துறை தொடர்பு எண்ணுக்கு அந்த வளர்ப்பு தாய் தகவல் அளித்தார்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் பாத்ரூம் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஏற்கனவே சிறுவன் ஸ்டுவர்ட் விஷம் கலந்த உணவை உண்டதால், நீரில் மூழ்கிய நிலையில் இறந்து போயிருந்தான்.
எஸ்பினாலை மீட்ட போலீசார் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குணமான அவன் மீது போலீசார் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் எஸ்பினாலுக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கணவனால் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை எஸ்பினாலின் மனைவி ஏப்ருவ் நடுங்கும் மனத்துடன் விவரித்துள்ளார். அவரது முகத்தில் மகனை பிரிந்த ஏக்கம் தெரிந்தது. "இந்த கொடூரமான கொலை என்னையும், எனது மகளையும் மிகுந்த கலக்கத்திற்கு உள்ளாக்கியது.
எனது மகனை நான் கடைசியாக பார்த்தபோது அவனது முகம் பிரகாசமாக இருந்தது. நான் வீட்டை விட்டு அன்றைய தினம் கிளம்பும் போது, என்னை பின் தொடர்ந்து வீட்டின் கதவு வரை வந்தான். நான் முழந்தாள் மண்டியிட்டு அவனிடம் அன்புடன் பேசினேன். ஏனென்றால் நான் என் மகனை உயிருடன் பார்க்கும் கடைசி தருணம் அது தான் என்று எனது இதயத்திற்கு தெரிந்திருந்தது என்கிறார்.
இனி வரும் காலங்களில் தந்தையே தன்னை கொல்ல முயன்ற கொடூர நினைவுகளுடன், மியா தனது வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்தார்.
எனினும் உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டதால், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து ஓரளவு தற்போது மீண்டு வந்திருப்பதாக ஏப்ருவ் தெரிவித்துள்ளார்.
சந்தேகம், அதனால் ஏற்பட்ட ஆத்திரம் ஒரு மனிதனை எந்த அளவிற்கு மிருகமாக்குகிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம் என்கின்றனர் இந்த கொடூர கொலையைப் பற்றி கேள்விப்பட்டவர்கள்.