ஓவியா மாதிரி இல்லாமல் ஜூலி மாதிரி பேசிய "சாட்பாட்".. பேஸ்புக் "ஷாக்"!!
சான்பிரான்சிஸ்கோ: ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மூலம் இயங்கக் கூடிய "சாட்பாட்" புரோகிராம், தன் இஷ்டத்திற்கு செயல்படத் தொடங்கியதால், அதை பேஸ்புக் நிறுவனம் நிறுத்தி விட்டது.
கிட்டத்தட்ட "பிக் பாஸ்" போலத்தான் இந்த சாட்பாட்டும். குறிப்பிட்ட கட்டளைக்கேற்ப அது செயல்பட வேண்டும். இன்டர்நெட் மூலமாக நாம் கம்ப்யூட்டருடன் உரையாடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது இந்த சாட் பாட். ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது. ஆனால் இதன் அடிப்படையை சீர்குலைக்கும் வகையில் சாட்பாட் சாப்ட்வேர் மாறியதால் குழப்பமாகி விட்டது.
கொடுக்கப்பட்ட பாஷைக்குப் பதில் (ஆங்கிலம்) பதிலாக அதுவே புதிய பாஷையை உருவாக்கிக் கொண்டதால் பீதி அடைந்து பேஸ்புக் நிறுவனம் அதை நிறுத்தி விட்டது. சாட்பாட் மேம்பாட்டில் பேஸ்புக் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் அதன் "லாங்குவேஜ்" வேறு ரூட்டில் போக ஆரம்பித்ததால் இந்தக் குழப்பம்.
பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டில் உள்ளது போல ஓவியா நடந்து கொண்டாலும், அதையும் தாண்டி ஜூலி ஓவர் ரியாக்ட் செய்கிறாரே அது போலத்தான் இதுவும்.
சமீபத்தில்தான் டெஸ்லா நிறுவன தலைமை செயலதிகி எலான் மஸ்க், ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மிகவும் அபாயகரமானது என்று கூறியிருந்தார். அவர் சொன்ன சில நாட்களிலேயே சாட்பாட் குழப்பம் வந்து சேரவே ஆர்ட்டிபீஷியல்
இன்டலிஜென்ஸ் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
சாட்பாட் உருவாக்கிய இந்த பாஷையை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. மாறாக, ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸுடன் கூடிய கம்ப்யூட்டர்களால் மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இது அது உருவாக்கப்பட்டதன் அடிப்படைக்கு முரண்பாடானது என்பதால் அதை பேஸ்புக் நிறுத்தி விட்டது.
கடந்த ஜூன் மாதம்தான் இந்தக் குழப்பத்தை தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டுபிடித்தனர். இது ஆச்சரியகரமானது, ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸில் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட இது அபாயகரமானது என்பதால்தான் அதை பேஸ்புக் நிறுத்த முடிவு செய்தது.
இதுகுறித்து ஸ்டீபன் ஹாக்கிங்கும் கூட முன்பு கவலை தெரிவித்திருந்தார். மனிதர்களை மிஞ்சும் வகையில் ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் வளர்ந்து விடும் அபாயம் உள்ளதாக அவர் கூறியிருந்தார். தற்போது கிட்டத்தட்ட அது உண்மையாகி விடுமோ என்ற அச்சத்தை பேஸ்புக் சாட்பாட் ஏற்படுத்தி விட்டது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்குக்கும், டெஸ்லா தலைமை செயலிதிகாரி மஸ்குக்குக்கும் இது தொடர்பாக சமீபத்தில் ஒரு கடும் விவாதம் மூண்டது. ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸின் அபாயம் குறித்த விழிப்புணர்வு மார்க்குக்கு இல்லை என்று கூறியிருந்தார் மஸ்க். ஆனால் அதை கடுமையாக விமர்சித்திருந்தார் மார்க். இதெல்லாம் சுத்த முட்டாள்தனம் என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் மஸ்க் சொன்னதுதான் சரி என்று பேஸ்புக் சாட்பாட்டே நிரூபித்து விட்டது என்பது நிச்சயம் மார்க்குக்கு சந்தோஷமானதாக இருக்க முடியாது.