பொசுக்கு, பொசுக்கென பூமிக்கு வந்து போகும் ஏலியன்கள்! ஆவணம் வெளியிட்ட எப்.பி.ஐ
வாஷிங்டன்: வேற்று கிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்களின் பரிணாம வடிவங்கள் பூமியில் இறங்கியதாக அமெரிக்க உளவுத்துறை தனது இணையதளத்தில் ஆவணங்களை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ தற்போது ஏலியன்கள் குறித்து வெளியிட்ட சில ஆவணங்கள் உலக விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் ஆவணங்களின் படி பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் வருகின்றன. இதில் சில வகை பரிணாம வளர்ச்சி பெற்று, முந்தைய ஏலியன் படங்களில் இருந்து மாறுபட்டவையாக உள்ளன. நவீன விமானங்கள் மூலமும் வந்து உள்ளன என்று கூறி ஆச்சரியம் ஏற்படுத்துகிறது அந்த அறிக்கை.
மனிதர்களை போன்ற ஏலியன்
அறிக்கையிலுள்ள சில சுவாரசிய விவரங்களை பாருங்கள்: ஏலியன்கள் வருகை தரும் பறக்கும் தட்டுக்கள் குழுவாகவே வந்திறங்குகின்றன. அவர்களின் நோக்கம் யாருக்கும் தொந்தரவு தருவதாக இல்லை. தங்களது பறக்கும் தட்டை (விமானத்தை) எங்கு தரையிறக்க வேண்டும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துதான் முடிவெடுக்கின்றனர். ஏலியன்கள் மனிதர்களைப் போல் உள்ளனர். ஆனால் மிகப்பெரிய வடிவில் உள்ளனர்.
பறக்கும் தட்டுகள்
அவர்கள் வந்த பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன. அவர்கள் தங்கள் விருப்பபடி உள் நுழைவதற்கு மற்றும் சுவடே இல்லாமல் சாதாரணமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர். அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை.
வெப்பம் தாங்கும்
பறக்கும் தட்டில் வெப்பத்தை தாங்கி கொள்ளும் உலோக குழல் உள்ளது. நடுவில் பரிசோதனைகூடம் உள்ளது. பின்புறம் போர் தளவாடங்களை கொண்டு உள்ளது. அவை அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இயந்திரத்தை கொண்டுள்ளது. இவ்வாறு விரிவடைகிறது அறிக்கை.
பல ஆண்டு வழக்கம்
வேற்றுகிரகவாசிகள் கடந்த பல நூற்றாண்டுகளாக பூமிக்கு வந்து செல்வது வாடிக்கை என்றபோதிலும், கடந்த 50, 60 ஆண்டுகளில் வருகை தந்ததைதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம், தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிதான் என்கிறது அந்த அறிக்கை.