இமெயில் விவகாரத்தில் ஹிலரி மீது வழக்கு தேவையில்லை… - புலனாய்வுத் துறை பல்டி!
வாஷிங்டன்(யு.எஸ்): பத்து நாட்களுக்கு முன்னர், புதிதாக கண்டுபிடித்த இமெயில்களில் அரசு ரகசியங்கள் அடங்கியிருக்கக் கூடும். ஆகவே ஹிலரி க்ளிண்டன் மீதான இமெயில் சர்வர் விவகாரத்தை மீண்டும் விசாரிக்கிறோம் என்று புலனாய்வுத் துறை (FBI) இயக்குனர் ஜேம்ஸ் கோமி, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார்.
ஹிலரியின் உதவியாளருடைய, பிரிந்து வாழும் கணவர் அண்டனி வீனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையில் ஆயிரக்கணக்கான இமெயில்கள் பிடிபட்டன. அவை அரசு ரகசிய இமெயில்களாக இருக்ககூடும் என்ற சந்தேகத்தில் அக்டோபர் 28ம் தேதி கோமி கடிதம் எழுதி இருந்தார். மீண்டும் ஹிலரி மீது விசாரணை தேவைப்படலாம் என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருந்தார்.
அன்று முதல், அதிபர் தேர்தல் ட்ரம்ப் பக்கம் திசை திரும்புவது போல் தோற்றம் உருவானது. ட்ரம்பும் இந்த கடிதத்தை தனது துருப்புச் சீட்டு போல் பயன்படுத்தினார். ஹிலரியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும். தேர்தலை ரத்து செய்து விட்டு, தன்னை அதிபர் ஆக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்.
கடும் போட்டி நிலவும் சில மாநிலங்களில் ட்ரம்புக்கு செல்வாக்கு கூடியதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ட்ரம்பும் உற்சாகமாக தனது சொந்த விமானத்தில் ஊர் ஊராக பறந்து பறந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
தற்போது, ஜேம்ஸ் கோமி புதிதாக ஒரு கடிதத்தை காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் ஹிலரி மீதான இமெயில் சர்வர் தொடர்பாக குற்ற நடவடிக்கை தேவையில்லை.
ஜூலை மாதம் புலனாய்வுத் துறையின் பரிந்துரை தற்போதும் தொடர்கிறது. ஹிலரி மீது குற்றம் சாட்டுவதற்கு புதிய முகாந்திரம் ஏதும் இல்லை.
பழைய இமெயில்களை விட புதிதாக எதுவும் தற்போதைய விசாரணையில் கிடைக்கவில்லை. ஆகவே எங்களுடைய பழைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ஹிலரிக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளார்.
புதிய அறிவிப்புக்கு ஹிலரி தரப்பு கடும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. தொலைக்காட்சி சானல்களும் ஹிலரி குற்றமற்றவர் என்று கூவிக் கூவி விற்காத குறையாக இந்த செய்தியை வெவ்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வெளியிடுகிறார்கள்.
கடந்த வாரம் கோமியை பாராட்டிய ட்ரம்ப், புதிய கடிததற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்கிறார். வெற்றியை எட்டி விடலாம் என்று நம்பி இருந்த ட்ரம்புக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கோமியை நேரடியாக குற்றம் சாட்டாமல், அமெரிக்க மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்.
ஹிலரி குற்றவாளி, அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் ட்ரம்ப் முன்வைக்கிறார்.
இந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை விட ஹிலரிக்கு அதிக குடைச்சல் கொடுத்தது அவர் வெளியுறவு அமைச்சராக இருந்த போது உபயோகப்படுத்திய தனிப்பட்ட இமெயில் சர்வர் விவகாரம்தான்.
இதோ நாளை இறுதி வாக்குப் பதிவு நாள். இந்திய நேரப்படி புதன்கிழமை காலை வாக்கு எண்ணிக்கைகள் தெரிய ஆரம்பித்து விடும். அமெரிக்க பசிபிக் நேரம் நள்ளிரவுக்குள் யார் அடுத்த அமெரிக்க அதிபர் என்ற முடிவு தெரிந்து விடும்.
240 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.