இத்தாலி அருகே கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு - 200க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி
ரோம்: இத்தாலி அருகே கடலில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் சிரியா, எத்தியோப்பியா, சோமாலியா, ஆப்கானிஸ் தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின் றனர்.அவர்கள் சட்ட விரோத மாக படகுகளில் புறப் பட்டு வருகின்றனர். வழியில் இயற்கை பேரிடர்களால் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.
இதுபோன்ற துயர சம்பவம் இத்தாலி அருகே மத்திய தரைக் கடலில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் 4 படகுகளில் அகதிகளாக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு புறப்பட்டு வந்தனர். மத்திய தரைக்கடலில் வந்தபோது அகதிகளை ஏற்றி வந்த 4 படகுகளும் கடலில் மூழ்கின. இதைப் பார்த்த இத்தாலி மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் அப்படகுகள் மூழ்கிவிட்டன.
அதில் இருந்த 40 பேரை மட்டுமே மீட்பு படையினரால் மீட்க முடிந்தது. மீதமிருந்த சுமார் 400 பேர் கடலில் மூழ்கி விட்டனர். அவர்கள் அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தகவலை இத்தாலி அதிபர் செர்ஜியோ மாட்ட ரெல்லா தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கி பலியானவர்களில் 200க்கும் மேற்பட்டோர் சோமாலியாவை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மீட்கபட்டவர்கள் தற்போது கிரேக்க நாட்டிலுள்ள கலமாட்டா பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாங்கள் லிபியாவிலிருந்து புறப்பட்டதாகவும், நடுக்கடலில் ஆள் கடத்தல்காரர்கள் தங்களை வேறொரு படகுக்கு மாறும்படி கூறினர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி மாறச்சொன்ன படகில் ஏற்கனவே 300 குடியேறிகள் இருந்தனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர். அந்தப் படகு மத்திய தரைக்கடலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கவிழ்ந்தது என மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.