136 ஆண்டுகளில் இல்லாத அளவு பிப்ரவரியில் "திகு திகு"வென வேலை செய்த சூரியன்... நாசாவின் ஹாட் நியூஸ்!
வாஷிங்டன்: கடந்த 136 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு பிப்ரவரி மாதம் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
பொதுவாக கொளுத்தும் கோடை என்றாலே அது ஏப்ரல், மே மாதங்கள் தான். ஆனால், இந்தாண்டு நவம்பர், டிசம்பரில் மழை வெளுத்து வாங்க, அதற்கு அப்படியே நேரெதிராக பிப்ரவரி மாதமே வெயில் தீவிரமாக அடிக்கத் தொடங்கிவிட்டது.
இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
நாசா அறிக்கை...
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனம் கட்டார்டு இன்ஸ்டியூட் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த மாதம் தான் அதிகளவு வெப்பம் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் வெப்பம்...
மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பிப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
136 ஆண்டுகளில்...
இந்த அளவானது கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும் போது, பிப்ரவரி மாதத்தில் பதிவான அதிகளவு வெப்பநிலை என நாசா தெரிவித்துள்ளது.
எல் நினோ...
அது மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல் நினோ காரணமாக இந்த பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
1880 முதல்...
1880ம் ஆண்டு முதல் உலக அளவில் வெப்ப நிலை மாற்றம், மழை அளவு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.