நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய பெண் - 30 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் காயம்
கனோ, நைஜீிரியா: வட கிழக்கு நைஜீரியாவில் மைதுகுரி என்ற இடத்தில் பஸ் ஸ்டாண்ட்டில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
ஒரு பெண்தான் குண்டுகளைக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. போக்கா ஹாரம் தீவிரவாதிகள்தான் இதை நடத்தியிருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டி ஒரு மீன் மார்க்கெட் உள்ளது. இந்த இடத்தைக் குறி வைத்து அடிக்கடி தாக்குதல்கள் நடந்துள்ளன. குண்டு வீச்சு, தற்கொலைப் படைத் தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த சம்பவத்தை நேரில் பார்த்த டன்லாமி அஜகுடா என்பவர் கூறுகையில், "பெரிய சத்தம் கேட்டது. நாங்கள் பிற்பகல் தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது" என்றார்.
சம்பவத்தின்போது இரண்டு இளம் பெண் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளனர். அதன் பின்னர்தான் குண்டு வெடித்தது. அதில் ஒருவர்தான் குண்டுகளை வெடிக்க வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் தற்கொலைப் படை தீவிரவாதியாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.
அவர்கள் கொண்டு வந்திருந்த பையில்தான் குண்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.