ஃபெட்னா தமிழ் விழா 2015... சான் ஓசேயில் குதூகல ஆரம்பம்!
சான் ஓசே (யு.எஸ்): வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை (ஃபெட்னா) சார்பில் ஆண்டு தோறும் நடைபெறும் தமிழ்விழா ஜூலை 2ம் தேதி, வியாழக்கிழமை குதூகலமாக ஆரம்பமானது.
இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை வரை இன்னும் இரண்டு தினங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்கிறது.
நட்சத்திர இரவு விருந்து
ஃபெட்னாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக நன்கொடையாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் விழா அழைப்பாளர்கள் பங்கேற்கும் நட்சத்திர இரவு விருந்து நடைபெறுவது வழக்கமான அம்சம் ஆகும். நேற்று இரவு சான் ஓசே மேரியாட் ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் நடிகர் மாதவன், பாடகர்கள் ஹரிசரண், ஆலப் ராஜூ, பாடகி பூஜா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது, ஆர்.ஜே தீனா, படவா கோபி உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரியவர்கள், சிறியவர்கள் உட்பட சுமார் 800 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
முன்னோட்டம்
விழா அமைப்பாளர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி, நடிகர் மாதவனின் சிற்றுரையுடன் நிறைவு பெற்றது. ஃபெட்னாவில் பங்கேற்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விரும்பியதாகவும் தற்போது தான் நிறைவேறியுள்ளதாகவும் கூறிய மாதவன், அமெரிக்காவில் இத்தனை தமிழர்களை ஒரே இடத்தில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
படவா கோபி சூப்பர் ஸ்டார் குரலில் அழைப்பு விடுத்தார். ஆர்.ஜே தீனா சத்யராஜ் ஸ்டைலில் கலாய்த்தார். பாடகி பூஜா ‘ பார்க்காதே பார்க்காதே' என்று மென் குரலில் பரவசப்படுத்தினார். ஆலப் ராஜு 'என்னமோ ஏதோ' பாடலின் சில வரிகளை பாடினார். உற்சாகமாக பேசிய ஹரிசரண் 'அய்யயோ ஆனந்தமே' என்று கலகலப்பு ஊட்டினார்.
அப்துல் ஹமீது, கல்யாண மாலை மோகன் உட்பட ஏனைய பிரபலங்கள், தமிழ் இலக்கியவாதிகள், தொழில் முனைவோர்கள் விருந்தில் கலந்து கொண்டனர்.
இன்று காலை 9:30 மணி அளவில் தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா ஆரம்பமானது.
தொழில் முனைவோர் கூட்டம்
மற்றும் தனித் தனி அரங்கங்களில் வெவ்வேறு நிகழ்ச்சிகளும் அரங்கேறின. முக்கியமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொழில் முனைவோர் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது.
ஃபெட்னாவுக்காக கிழக்கு, வடக்கு, தெற்கு என அனைத்து திசைகளிலிருந்தும் சான் ஓசேயில் குவிந்திருக்கிறார்கள் தமிழர்கள்.
ஃபெட்னா தொடர்பான செய்திகளுக்கு ஒன் இந்தியாவுடன் இணைந்திருங்கள்.
-சான் ஓசேயிலிருந்து இர தினகர்.