ஃபெட்னா 2017: தமிழ்ப்பேரவை விழாவில் “காங்கேயக் காளை” கார்த்திகேய சிவசேனாபதி
மினசோட்டா: கார்த்திகேய சிவசேனாபதி, வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனது போராட்ட அனுபவங்களைத் தமிழர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.
தமிழ்நாட்டில் 1990ஆம் ஆண்டின் போது பனிரெண்டு இலட்சங்களாக இருந்த நாட்டுக்காளைகளின் ஒரு பிரிவான காங்கேயக் காளைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து 2005ஆம் ஆண்டு வாக்கில் வெறும் ஐந்து இலட்சங்களாகக் குறைந்து விடுகின்றன.
தம் முன்னோர் கட்டிக் காப்பாற்றி வந்த தமிழின் மரபுவழிச் சொத்தான காங்கேயக் காளைகளின் வம்சாவழியை, நாட்டுக்காளைகளின் தலைமுறையை நிலைநிறுத்தும் களப்பணியில் தொடர்ந்து தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர்தான் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள்.
காங்கேயக் காளைகள் ஆய்வு மையத்தின் அறங்காவலராகவும் திகழ்கிறார். தமிழக பாரம்பரிய கால்நடைகளின் பாதுகாப்பில் தீராத அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்.
இந்தியா மட்டுமன்றி,. பல வெளிநாடுகளுக்கும் சென்று அந்த நாட்டு பாரம்பரிய கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பான போராட்டங்கள் மற்றும் பல கருத்தரங்குகளில் பங்கெடுத்தவர்.
நொய்யல் நதி புணரமைப்பு பணி, அவிநாசி அத்திகடவு திட்டம், வேதி உரங்களில்லா இயற்கை விவசாயம், பாரம்பரிய கால்நடை ஆராய்ச்சி என எதிர்கால சந்ததிக்கான போராளியாகவும் களப்பணியில் செயற்படுபவர்.
தமிழக பாரம்பரிய, மரபு சார்ந்த விழுமியங்களை இன்றளவும் பாதுகாக்க வேண்டும் என்றும் அதற்கு களம் பல காணவேண்டும் என்றாலும் தயங்காமல் போராட்டங்கள் நடத்திவரும் சிவசேனாதிபதி தனது அனுபவங்களை தமிழர்களிடம் பகிந்துகொள்ளவுள்ளார்.