அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் பெட்னா 2018 மாநாடு!
அமெரிக்காவில் வருடம் தோறும் நடத்தப்படும் பெட்னா மாநாடு, 2018-ல் டல்லாஸ் மாநகரில் நடத்தப்பட உள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவிலும் கனடாவிலும் வசிக்கும் தமிழர்கள் கொண்டாடும் விழாவான பெட்னா மாநாடு 2018, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் மாநகரத்தில் நடைபெற உள்ளது.
அமெரிக்காவிலும் கனடாவிலுமுள்ள தமிழ்ச்சங்கங்களில் சுமார் நாற்பது தமிழ்ச்சங்கங்கள் கொண்ட கூட்டமைப்புதான் பெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பதாகும்.பேரவை ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தின்போது, அமெரிக்காவின் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள நகரத்தில் மாநாடு நடத்தும்.
இரண்டு நாட்கள் முழுக்க முழுக்க தமிழ், தமிழர் விழாவாக இடம்பெறும். தமிழகத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் மொழியையும், இனத்தையும் போற்றிவருகிற பிரபலங்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து அவர்களுக்குச் சிறப்பு செய்வது பேரவையின் வழமையாகும்.
பேரவை நோக்கம்
அமெரிக்காவாழ் தமிழர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் நம் தாய்மொழியாம் தமிழின் சிறப்பை, தமிழர்களின் கலையை, பண்பாட்டை எளிய முறையில் இயல், இசை, நாடகம் மூலம் பரப்புவது, தமிழர்களுக்கான ஒரு பொதுத்தளத்தைக் கட்டமைப்பது போன்றவையே பேரவையின் நோக்கமாக இருந்து வருகின்றன.சிறந்த கல்வி ஆளுமைகளையும், பெரும் புரவலர்களையும் வரவழைத்து, அவர்களின் தமிழ்ப்பணி, தமிழ்க்கொடையை அமெரிக்க தமிழர்களுக்கு அடையாளப்படுத்திச் சிறப்பித்தும் வருகிறது தமிழ்ச்சங்கப் பேரவை. விழாவில் தமிழ்நாட்டு பிரபலங்கள் திரைத்துறை, அரசியல் மற்றும் இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பார்கள்.
வரலாற்று நாடகங்கள்
பேரவை விழாவில் கலை சார்ந்த எண்ணற்ற நபர்கள் வந்தாலும், ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட கலைஞர்களை அழைத்து, விழாவில் அவரது கலைகளை கேட்டு ரசித்து, அவர்களுக்கு மரியாதையும் செய்யும் பழக்கம் பேரவைக்கு உண்டு. தமிழ் இசையில் மிகப்பெரும் பாடகர்களை வரவழைத்தும் பேரவை மரியாதை செய்து இருக்கிறது. வரலாற்று நாடகங்கள் வருடா வருடம் பேரவை விழாவில் இடம்பெறும்.
தமிழ் தொழில் முனைவோர்
தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டின் தமிழ் தொழில்முனைவோர் கூட்டத்தில் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்து, படித்து, வேலைப்பார்த்து விட்டு, தொழில் தொடங்கி பல வெற்றிகளைக் குவித்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
டல்லாஸில் பெட்னா 2018
தமிழ்ச்சங்கப் பேரவை விழா வாஷிங்டன், நியுயார்க், அட்லாண்டா, சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ, செயிண்ட்லூயிஸ், மினியாபோலிஸ், கனடா இப்படி பல்வேறு இடங்களில் நடந்து இருக்கிறது. அடுத்த பேரவை மாநாடு 2018ம் ஆண்டு டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் மாநகரத்தில் நடை பெற உள்ளது. 2005ம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாம் முறையாக டல்லாஸ் நகரில் நடக்க இருக்கும் விழாவை பல்வேறு தமிழ்ச் சங்கங்கள், தமிழ் பள்ளிகள் சேர்ந்து மிகப் பெரும் விழாவாக நடத்தத் திட்டமிட்டு உள்ளார்கள். கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் ஆறுமாதம் இரவு பகலாக உழைத்து, மாபெரும் விழாவை நடத்த உள்ளார்கள். அதில், தமிழர்களின் பாரம்பரிய, அனைத்து வகையான உணவுகளும் விழா அரங்கத்தில் கிடைக்கும்.