பெட்னா 2015 விழா: 8 கே ரேடியோ அறிமுகம்… சிவகாமியின் சபதம், இன்னிசை நிகழ்ச்சி
வட அமெரிக்கத் தமிழர்ச் சங்கப் பேரவையின் சார்பில், தமிழ் விழா வரும் ஜூலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கலிபோர்னியாவில் நடைபெறுகிறது.
கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள சிட்டி நேசனல் சிவிவ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதன் முறையாக 8 கே. தமிழ் வானொலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 24 மணிநேரமும் இடை விடாமல் ஒளிபரப்பாக உள்ளது.
பெட்னா 2015 இரண்டு நாள் விழாவில், பல்வேறு அரங்குகளில் சுமார் 80 மணி நேர தமிழ் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் நீதியரசர் சி.விக்னேஸ்வரன், நடிகர் மாதவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பாடகி சௌமியா,கவிமாமணி அப்துல் காதர், ஹரிசரன், முனைவர் மார்கரெட் பாஸ்டின், பாடகர் ஆலாப் ராஜூ, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன்,பேச்சாளர் சுமதி ஸ்ரீ, திரு.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தமிழக அரசின் நிதித்துறை செயலாளர், நாட்டுப்புற பாடகர் மகிழினி மணிமாறன்,
எழுத்தாளர் பூமணி, முனைவர் ராஜம், முனைவர் விஸ்வநாதன், முனைவர் ஜெகத்ரட்சகன், கல்யாணமாலை மோகன், பூஜா, ரோஷினி, பென்னட், பிரகதி, வைதேகி, அப்துல் ஹமீது, நடிகை ஜெயஸ்ரீ, படவா கோபி, டாக்டர் எஸ்.பழனியப்பன், ஆர்.ஜே தீனா, ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
8 கே வானொலி அறிமுகம்
பெட்னா 2015ம் ஆண்டு விழாவில் முதன் முறையாக 8 கே.வானொலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் தமிழிசை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி, தமிழ் பேருரைகள் ஒலிபரப்பாக உள்ளன. சௌமியாவின் கர்நாடக இசை, சிவகாமியின் சபதம் நாடகம், பறை இசை ஒலிக்க உள்ளது. திரைப்படப் பாடகர்கள் ஹரிசரன், ரோஷினி, மகிழினி, ஆலாப் ராஜு, சூப்பர் சிங்கர் பாடகர்கள் பிரகதி, பூஜா ஆகியோர் விஜய் டிவி புகழ் பென்னட் இசை குழுவினருடன் இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பில்டர் காபி வித் பெட்னா
8 கே ரேடியோவில் படவா கோபி மற்றும் வானொலி அறிவிப்பாளர் தீனாவும் இணைந்து நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர். ‘பில்டர் காபி வித் பெட்னா' சூடா இருக்கும் ஆனா டேஸ்டா இருக்கும் நீங்க குடிக்கலாம் என்கிறார் படவா கோபி.
இலக்கிய நிகழ்வு
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பூமணி, தமிழ்/இந்தியவியல் அறிஞர்கள் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனைவர் வி.எஸ்.இராஜம், வைதேகி ஹெர்பர்ட், பேராசிரியர் மைக்கேல் விட்சல் (ஹாவர்டு பல்கலைக்கழகம்) போன்றோர் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வும் நடக்கிறது.
அப்துல் ஹமீது
கவிமாமணி அப்துல் காதர் அவர்கள் தலைமையில் 'ஆர்த்தெழு நீ!' என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கம் நடைபெற உள்ளது.
சுமஸ்ரீயின் கருத்தரங்கம்
கவிஞர் சுமதி ஸ்ரீ அவர்கள் நெறிப்படுத்தி நடத்தும் "தமிழன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமானது மொழியா? கலையா"தலைப்பில் அனல் பறக்கும் கருத்துக்களம் நடைபெற உள்ளது. கல்யாண மாலை மோகனின் சிறப்பு கல்யாண மாலை நடைபெற உள்ளது.
சிறப்பு பேச்சாளர்கள்
இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக தியாகராஜா நிறுவனங்கள், கல்வி குழுமங்களின் தலைவர் கருமுத்து டி.கண்ணன், ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தின் சி.இ.ஓ கே.ஆர். ஸ்ரீதர், சுஜா சந்திரசேகரன் வால்மார்ட் ஸ்டோர், உள்ளிட்ட பல நிறுவனங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களும் பேச உள்ளனர்.இதோடு பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள், தியாகராஜா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பும், தொழில் முனைவோர்களின் சந்திப்பும் நடைபெற உள்ளது.