புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவின் உடல் உடனடியாக தகனம் - டிச.4 வரை அஸ்திக்கு அஞ்சலி
மறைந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் உடல் நேற்று அவரது விருப்பப்படி உடனடியாக தகனம் செய்யப்பட்டதாக கியூபா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹவானா: பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் என்று கியூபா அரசு அறிவித்து உள்ளது. டிசம்பர் 4ம்தேதி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அரசு முறைப்படி சாண்டியாகோ டி கியூபா நகரில் புதைக்கப்படும் என்றும் கியூபா நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கியூபா நாட்டில் நடந்த சர்வாதிகார ஆட்சியை புரட்சியின் மூலம் கைப்பற்றி அந்த நாட்டின் பிரதமராக 1959ம் ஆண்டு ஜூன் மாதம் 24தேதி தனது 32-வது வயதில் பிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்றார். 1976ல் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006ம் ஆண்டு குடல் நோய் காரணமாக உடல் நலக்குறைவு அடைந்த பிடல் காஸ்ட்ரோ 2008ம் ஆண்டு தனது அதிபர் பதவியை சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். அமெரிக்காவிற்கு கடும் சவாலாக இருந்தார் காஸ்ட்ரோ.
பிடல் காஸ்ட்ரோ மரணம்
இந்த நிலையில் அவருடைய உடல் நிலைமை மோசம் அடைந்தது. பிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி(இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 9.30 மணி) அளவில் மரணம் அடைந்தார். இந்த அறிவிப்பை அவருடைய சகோதரரும், கியூபாவின் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். பிடல் காஸ்ட்ரோவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
காஸ்ட்ரோவின் ஆசை
தான் இறந்த உடன் தனது உடலை தகனம் செய்து விட வேண்டும் என்று அவருடைய சகோதரும் கியூபா அதிபரிடம் தெரிவித்திருந்தாராம் காஸ்ட்ரோ. அதன்படி உடனடியாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக கியூபா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுமக்கள் அஞ்சலி
அவரது அஸ்தி வருகிற 4ம்தேதி சாண்டியாகோ டி கியூபா நகரில் புதைக்கப்படுகிறது. அதுவரை அவருடைய அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் என்று கியூபா அரசு அறிவித்து உள்ளது.
துக்கம் அனுசரிப்பு
நாடு முழுவதும் 4ம் தேதி வரை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. பிடல் காஸ்ட்ரோவின் மறைவு அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரால் நாடு கடத்தப்பட்டவர்கள் காஸ்ட்ரோவின் மறைவு செய்தியைக் கேட்டு சாலைகளில் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.