கியூப புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோ மகன் டயஸ் பலார்ட் தற்கொலை!
Recommended Video
ஹவானா: கியூப புரட்சியாளரும் அந்த நாட்டின் முன்னாள் அதிபருமான, பிடல் கேஸ்ட்ரோவின் மூத்த மகன் டயஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 68.
மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த டயஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பிடல் கேஸ்ட்ரோவின் மூத்த மகன் டயஸ் பலார்ட் உருவ ஒற்றுமையில் அப்படியே தனது தந்தையை போன்றவர் என்பதால் இவர் 'பிடலிடோ' என்று பெரும்பான்மையோரால் அழைக்கப்பட்டார்.
முன்னாள் சோவியத் யூனியனில், அணு இயற்பியல் படித்திருந்த அவர், கியூபா சயின்ஸ் அகாதமி மையத்தின் துணை தலைவராகவும், கியூபா அரசின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.
மனஅழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த டயஸ் பலார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிலநாட்களுக்கு முன்புதான், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர், வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது வீட்டில், டயஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த பிடல் கேஸ்ட்ரோ, கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் 90வது வயதில் மரணமடைந்தார். இப்போது அவரது மகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கியூபா மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.