உக்ரைன் நாடாளுமன்றத்தில் ' தாமரைக்கனி' ஸ்டைலில் எம்பிக்கு சரமாரி குத்துவிட்ட எதிர்க்கட்சி தலைவர்
உக்ரைன் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
கீவ்: உக்ரைன் நாடாளுமன்றத்தில் தம்மை ரஷ்யாவின் ஏஜெண்ட் என குற்றம்சாட்டிய எம்.பி. ஒலேக் லையாஸ்கோ முகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யூரி போய்கோ சரமாரியாக குத்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த உக்ரைனில் அரசியல் கிளர்ச்சிகள் தொடருகின்றன. இது அந்த நாட்டு நாடாளுமன்றத்திலும் அவ்வப்போது எதிரொலித்து கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு உக்ரைன் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் பேசிக் கொண்டிருந்த பிரதமரையே குண்டு கட்டாக தூக்கி வீசிய சம்பவமும் நடந்தது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று ஒலேக் லையாஸ்கோ என்ற எம்.பி. பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் யூரிய் போய்கோ ரஷ்யாவின் ஏஜெண்ட்டாக செயல்படுகிறார்.. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு நேரில் சென்று அந்நாட்டு அரசாங்கத்திடம் இருந்து உத்தரவுகளைப் பெற்று அதனடிப்படையில் செயல்படுகிறார்.. அவரை சிறையில் தள்ள வேண்டும் என முழங்கிக் கொண்டிருந்தார்.
இதை அருகில் அமர்ந்து பொறுமையாக கேட்டுக் கொண்டே இருந்தார் யூரிய் போய்கோ. ஒருகட்டத்தில் பொறுமை இழந்தவராக எழுந்து ஒலேக் லையாஸ்கோ தலையை பிடித்து அமுக்கி முகத்தில் அடுத்தடுத்து குத்துவிட சபையே களேபரமானது. பின்னர் யூரிய் போய்கோ நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற சபை தலைவர் உத்தரவிட்டார்.
தமிழக சட்டசபையில் திமுகவின் வீரபாண்டி ஆறுமுகத்தை அதிமுகவின் தாமரைக்கனி இப்படித்தான் தம்முடைய கையில் அணிந்திருந்த பெரிய மோதிரத்தால் முகத்தில் ஓங்கி குத்தி பரபரப்பை கிளப்பினார். இருவருமே தற்போது காலமாகிவிட்டனர்.
உக்ரைன் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவம் நமது தாமரைக்கனியைத்தான் நினைவூட்டுவதாக இருந்தது.