‘கேஸ் ப்ராப்ளம்’.. நடுவானில் மோதிக் கொண்ட பயணிகள்... வியன்னாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!
பயணி ஒருவர் வாயு வெளியேற்றியது தொடர்பான பிரச்சினையால் வியன்னாவில் துபாய் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
துபாய்: பயணிகள் இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று, அவசரமாக வியன்னாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இரண்டு பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்படக் காரணம் அதில் ஒருவர் தொடர்ந்து வாயு வெளியேற்றிக் கொண்டிருந்தது தான் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்தது. அப்போது, இரண்டு பயணிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலுக்கான காரணம் இரண்டு பயணிகளில் ஒருவர் தொடர்ந்து வாயு வெளியேற்றிய வண்ணம் இருந்தது தான் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆரம்பத்தில் இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட பயணி விமானப் பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களும் சம்பந்தப்பட்ட பயணியிடம் சென்று நிலைமையை விளக்கியுள்ளனர். ஆனால், அதற்குப் பிறகும் தொடர்ந்து அவர் வாயு வெளியேற்றவே மோதல் உருவானதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வாயு வெளியேற்றிய பயணி ஏதேனும் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
ஆனபோதும், இந்தப் பிரச்சினையால் மோதல் அதிகரிக்கவே நிலைமையை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை வியன்னாவில் தரையிறக்கியுள்ளார். பின்னர் ஆஸ்திரியா போலீசார் மோதலில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் மற்றும் அவர்களுடன் பயணித்த இரண்டு பெண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் சிறிது நேரம் தாமதமாக விமானம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான்கு பேரும் பின்னர் வேறு விமானம் மூலம் வியன்னாவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் அழைத்துச் செல்லப்படுவர் என ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.