20 வருட மத மோதல்.. வாட்டிய பஞ்சம்.. லெபனான் வெடிப்பிற்கு பின் இருக்கும் வல்லரசு நாடுகளின் அதிகார பசி
பெய்ரூட்: லெபனான் நாட்டில் தற்போது ஏற்பட்டு இருக்கும் கிடங்கு வெடிப்பிற்கு பின் அரசியல் ரீதியான மோதல்கள் , மத ரீதியான காரணங்களும் இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி சிரியா வரை பல்வேறு நாடுகளின் மோதல் இந்த
பெய்ரூட்: லெபனான் நாட்டில் தற்போது ஏற்பட்டு இருக்கும் கிடங்கு வெடிப்பிற்கு பின் அரசியல் ரீதியான மோதல்கள் , மத ரீதியான காரணங்களும் இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி சிரியா வரை பல்வேறு நாடுகளின் மோதல் இந்த வெடிப்பிற்கு பின்னணியில் இருக்கிறது.
Recommended Video
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு அந்த நாட்டை உலுக்கி உள்ளது. உலகத்திற்கே இந்த வெடிப்பு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத மோசமான சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்படி ஒரு வெடிப்பு அல்லது தாக்குதல் நடக்க போகிறது என்று அந்நாட்டு மக்கள் 20 வருடமாக எதிர்பார்த்து இருந்தனர் என்று கூறினால் நம்புவீர்களா, இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை அந்நாட்டு மக்கள் முன்பே கணித்து இருந்தனர் என்றால் நம்புவீர்களா? ஆம் தங்கள் நாட்டில் விரைவில் ஒரு அசம்பாவிதம் நடக்க போகிறது என்பது அந்நாட்டு மக்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தது.
லெபனான் வெடிப்பு
லெபனான் கடந்த 20 வருடமாக கடுமையான பஞ்சத்தில் இருக்கிறது. கடுமையான பஞ்சம் என்றால் சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காத அளவிற்கு மிக மோசமான பஞ்சம். உலகமே கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்து இருக்கும் போது, அதற்கு முன்பே மிக மோசமான சரிவில்தான் லெபனான் பொருளாதாரம் இருந்தது. அரசுக்கு எதிராக பெரிய அளவில் கொந்தளிக்க மக்கள் காத்து இருந்தனர்.
பெரிய பஞ்சம்
எந்த அளவிற்கு பஞ்சம் என்றால் அங்கு வேலைவாய்ப்பின்மை 30%ஐ தாண்டியது. நாட்டின் கடன் நான்கு மடங்கு உயர்ந்தது. உலகிலேயே அதிக கடன் வைத்து இருக்கும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் லெபனான் இருக்கிறது. 75% மக்கள் லெபனானில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். நிமிடத்திற்கு நிமிடம் அந்த நாட்டின் கடன் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த கட்டுரையை தொடங்கி முடிக்கும் முன் அந்த நாட்டின் கடன் 0.5% சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கும் என்று கூறுகிறார்கள்.
அதிக கடன்
ஆம் 30 நிமிடத்திற்கு ஒருமுறை அந்த நாட்டின் கடன் புதிய உச்சத்தை தொடுகிறது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ஆக உள்ளது. அதே டாலருக்கு நிகரான லெபனீஸ் பவுண்ட் மதிப்பு 1500 என்றால் நம்புவீர்களா. ஆம் அவ்வளவு மோசமான பண மதிப்பை அந்த நாடு கொண்டுள்ளது. காரணம், அந்த நாடு தற்போது திவாலான பொருளாதாரத்தை கொண்டு இயங்கி வருகிறது.
கொடுமையான வறுமை
வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பக் கூட நீங்கள் தனியாக காசு கொடுக்க வேண்டும் என்றால் லெபனான் நிலைமையை பார்த்துக் கொள்ளுங்கள். நிலைமை இப்படி இருக்க இன்னொரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்குதல் வேறு அந்த நாட்டை உலுக்கி உள்ளது. லெபனானில் இப்போதுதான் கொரோனா கேஸ்கள் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. ஆனால் அதற்கு முன்பே அங்கு கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட லாக்டவுனால் பொருளாதாரம் மொத்தமாக முடங்கி உள்ளது.
மத ரீதியான மோதல்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அங்கு மத ரீதியான மோதலும் மிக முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. லெபனானில் மொத்தம் 18 மத பிரிவுகளை அனுமதித்து உள்ளனர். இஸ்லாமில் 4 பிரிவுகள், 12 கிறிஸ்துவ பிரிவுகள், என்று முக்கியமான மதங்களுக்கு உள்ளேயே பெரிய அளவில் பிரிவுகளை ஏற்படுத்தி அதை அனுமதித்து இருக்கிறார்கள். அந்த நாட்டின் மோதலுக்கு இதுதான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
சண்டைதான் எப்போதும்
அங்கு அரசியல் தலைவர்கள் , பிரதமர் , அதிபர், சபாநாயகர், நீதிபதி என்று எல்லோரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் சொல்லும் விஷயத்தை இன்னொருவர் கேட்க மாட்டார். கடந்த 20 வருடமாக இவர்களுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தபடியே இருக்கிறது. 128 நாடாளுமன்ற இடங்கள் அங்கு மத ரீதியாக பிளவுபட்டு இருப்பதால் ஒரே கட்சியை சேர்ந்த எம்பிகளுக்கு இடையே கூட மோதல் நிலவி வருகிறது.
வல்லரசு நாடுகள்
ஒரு பக்கம் வறுமை, மத மோதல் இருக்க இன்னொரு பக்கம் அதிகார போட்டியும் நிலவி வருகிறது. லெபனானை யார் கைப்பற்றுவது என்ற மோதல் அங்கே இன்னும் நிலவி வருகிறது. அதாவது அமெரிக்கா, சவுதி ஆதரவு அளிக்கும் சன்னி ஆட்சியா அல்லது ஈரான், சிரியா ஆதரிக்கும் ஷியா ஆட்சியா என்ற அதிகார மோதலும் நடக்கிறது . இப்போதுதான் அங்கு போர் முடிந்து இருந்தாலும், இன்னும் உள்நாட்டு யுத்தம் அமைதியாக அங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது .
இஸ்ரேல் எப்படி
அமெரிக்காவின் அதிகார பசி, ஷியா - சன்னி மோதல் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் லெபனான் மீது இஸ்ரேலும் கோபத்தில் உள்ளது. பாலஸ்தீன புரட்சி படைகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, லெபனான் மீது இஸ்ரேல் கடும் கோபத்தில் இருக்கிறது. ஏற்கனவே இரண்டு நாடுகளும் போருக்கு சென்று இருக்கிறது. இந்த நிலையில் ஒருவேளை லெபனான் வெடிப்பிற்கு இஸ்ரேல் கூட காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வெடிகுண்டு தாக்குதல்
இதனால் லெபனான் மக்கள் எதோ ஒரு வகையில் தங்கள் நாட்டில் வெடிகுண்டு தாக்குதலோ, ஏவுகணை தாக்குதலோ கண்டிப்பாக இருக்கும் என்பதை எதிர்பார்த்துதான் இருந்தனர். இந்த வெடிப்பு விபத்தாக இருக்கலாம் என்று பலரும் நினைக்கும் போது, லெபனான் மக்கள் இது ஒரு தாக்குதல் என்று உறுதியாக நம்ப இதுதான் காரணம். இந்த லெபனான் வெடிப்பு காரணமாக இன்னும் 2 அல்லது மூன்று நாட்களில் அங்கு ஆட்சி கவிழும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள்.