ரஷ்யாவில் தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிர் இழந்தார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புஷ்கினோ மாவட்டத்தில் இருக்கும் முரானோவோ கிராமம் அருகில் போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி பலியானார்.
விமானம் குடியிருப்பு பகுதியில் விழாமல் தடுத்த விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் சுகோய் எஸ்யூ-27 ரகத்தை சேர்ந்தது. விமானம் குடியிருப்பு பகுதியில் விழாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியதால் விமானியால் தனது இருக்கையை எஜெக்ட் செய்து தப்பிக்க முடியவலில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலியான விமானி மேஜர் செர்கி எரிமென்கோ(34) என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
செர்கி ரஷ்ய நைட்ஸ் விமான சாகச அணியின் ஸ்குவாட்ரன் லீடராக இருந்தார். அவர் எம்.ஐ.ஜி.-29, எஸ்யூ-27 உள்ளிட்ட பல ரக விமானங்களை ஓட்டிய அனுபவசாலி என்பது குறிப்பிடத்தக்கது.