ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பு.. மர்மநபரின் வெறிச்செயலால் 24 பேர் பரிதாப பலி
க்யோட்டோ: ஜப்பான் நாட்டில் பிரபல அனிமேஷன் ஸ்டுடியோ அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கியோஅனி என்றழைக்கப்படும் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோவில் தான் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த 1981-ம் ஆண்டு அனிமேஷன் மற்றும் காமிக் புத்தக தயாரிப்பு ஸ்டுடியோவாக இது அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பயங்கர தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரிகள், அனிமேஷன் ஸ்டுடியோ அமைந்துள்ள கட்டடத்திற்கு வேண்டுமென்றே மர்ம நபர் தீ வைத்துள்ளதாக சந்தேகிக்கிறோம். ஆனால் எதற்காக மர்ம நபர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
ஸ்டுடியோ அமைந்துள்ள 3 தளங்கள் கொண்ட மிகப்பெரிய கட்டடத்தினுள் மர்மநபர் ஒருவர் பெட்ரோல் போன்ற எரிபொருள் எதையோ ஊற்றி தீ வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே அது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்பு படையினர் கட்டடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
ஆனால் அப்போது அதில் பலரது நிலை மோசமாக இருந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12லிருந்து 24ஆக அதிகரித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் இந்த பெரிய கட்டடத்தில் சுமார் 70-க்கும்மேற்பட்டோர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அனிமேஷன் ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தால் வானளாவிய உயரத்துக்கு கரும்புகை எழுந்தது.