சவுதி அரேபியாவில் மெக்கா அருகே ஹோட்டலில் தீ விபத்து... 1000 ஹஜ் யாத்ரீகர்கள் வெளியேற்றம்
மெக்கா: சவுதி அரேபியாவில் புனித மெக்கா அருகேயுள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர். தீ விபத்தைத் தொடர்ந்து ஹோட்டலில் இருந்த 1000 ஆசிய ஹஜ் யாத்ரீகர்கள் உடனடியாக வெளியேற்றப் பட்டனர்.
இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்' யாத்திரை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மெக்கா நகருக்கு சென்று அங்குள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் மெக்கா அருகேயுள்ள கஷிஸியா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஹோட்டலின் 8வது மாடியில் பயணிகள் தங்கியிருந்த அறைக்கு வெளியே தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஓட்டலில் ஆசிய நாடுகளை சேர்ந்த ஹஜ் பயணிகள் ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். தீவிபத்தைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த ஹஜ் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் இரண்டு ஹஜ் பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
ஏற்கனவே, கடந்த 11ம் தேதி மெக்கா பெரிய மசூதியில் கிரேன் அறுந்து விழுந்து கட்டிடம் இடிந்த விபத்தில் 107 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.