முதியோர் காப்பத்தில்... பயங்கர தீ விபத்து... 11 பேர் பரிதாப பலி!
மாஸ்கோ: ரஷ்யாவில் முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 முதியவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தபோதிலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
தீ விபத்து நடந்த நேரம் நள்ளிரவு நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முதியவர்கள் சிக்கி கொண்டனர். இந்த விபத்து அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் மாகாணத்தில் உள்ள இஸ்புல்டினோ என்ற கிராமத்தில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மரத்தினால் அமைக்கப்பட்டு இருந்த இந்த காப்பகத்தில் 15-க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த காப்பகத்தில் திடீரென தீ பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டடம் முழுமையும் பரவியது.
நள்ளிரவு நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த முதியவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் காப்பகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். இருந்த போதிலும் காப்பக ஊழியர் உள்பட சிலர் அங்கு இருந்து தப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் 4 மூதாட்டிகள் உள்பட 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.