ரஷ்ய நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து.. ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது சோகம்.! 14 மாலுமிகள் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் அறிவியல் ஆராய்ச்சி ஒன்றிற்காக நீர்மூழ்கி கப்பலில் சென்ற மாலுமிகள் தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்தில் சிக்கியது ரஷ்ய நாட்டிற்கு சொந்தமான மிக ரகசியமான நீர்மூர்கி கப்பல் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய மாலுமிகள் ஆர்க்டிக்கிற்கு அருகிலுள்ள கடல் தளத்தின் ஆழமான பகுதியில, நீர்மூழ்கிக் கப்பலில் சென்று ஆய்வு செய்யும் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய நீர்மூழ்கி கப்பல் அணுசக்தியால் இயங்க கூடியது என ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தீ பிடித்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் எந்த வகையில் இயங்கு கூடியது என்பன போன்ற தகவல்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நீர்மூழ்கி கப்பலில் பற்றிய தீயை ஊழியர்கள் உடனடியாக அனைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தீப்பிடித்த பகுதியில் இருந்து வெளியான நச்சுப்புகை அதிலிருந்த ஊழியர்களின் உயிரை பறித்து விட்டதாகவும் தெரிவிக்கின்றன.
14 ஊழியர்களை பலி கொண்ட நீர்மூழ்கி கப்பல் தற்போது ஸ்பேரோமார்ச் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 14 மாலுமிகளும் மிகவும் உயர்தர தொழில்திறன் கொண்ட மாலுமிகள் என ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மரணித்த 14 கடற்படை மாலுமிகளுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டின் உயர் விருதை அறிவித்து கவுரவப்படுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 2000ஆம் ஆணடில் குர்ஸ்க் என்ற ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் ,இதே போல கடற்பகுதியில் விபத்தில் சிக்கி அதிலிருந்த 118 பேரும் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த மிகப்பெரிய சம்பவமாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது.
இது ரஷ்ய கடற்படைக்கு மிகப்பெரும் இழப்பாகும் என ரஷ்ய அதிபர் புதின், தனது பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுகுடனான தொலைக்காட்சி சந்திப்பில் தெரிவித்துள்ளார். நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இறந்த மாலுமிகளின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார்
இந்நிலையில் நீர்மூழ்கி கப்பலில் தீப்பற்றியது ஏன், அதில் இருந்து நச்சுப் புகை வெளியானது ஏன் என்றும் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.