வெனிசூலா சிறையில் பயங்கர தீ விபத்து: 8 பெண்கள் உட்பட 17 கைதிகள் கருகி பலி
காரகஸ்: வெனிசுலா நாட்டு சிறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 கைதிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெனிசூலாவின் வடக்குப் பகுதியில் காரபோபா மாநிலத்தில் உள்ளது டோகுயிட்டோ சிறைச்சாலை. நேற்று அதிகாலை இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கைதிகள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 9 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள்.
மேலும் இந்த தீவிபத்தில் 11 பேர் காயமடைந்தனர். இவர்கள் வேலன்சியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெனிசுலா நாட்டு சிறைகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே, அடிக்கடி அங்கு இது போன்ற கைதிகள் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
சிறைச்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தை வெனிசுலா அரசு நடைமுறைப்படுத்தவில்லை என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.