ஒரு குண்டு வந்தாலும், அமெரிக்கா, நட்பு நாடுகள் நலன்கள் தீக்கிரையாகும்.. ஈரான் பகிரங்க எச்சரிக்கை
தெஹ்ரான்: அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று, ஈரான் இன்று பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மேலும், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதித்தார்.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என்று இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் தடை விதித்தார். கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்கு, சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானமான ட்ரோனை, ஈரான் சுட்டு வீழ்த்தி டென்ஷனை கூட்டியது. இதையடுத்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும் உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்தார். ஆனால், திடீரென தனது முடிவை தானே வாபஸ் பெற்றார்.
இப்படியாக பதற்றச் சூழல் நிலவும் நிலையில், "ஈரானை நோக்கி ஒரு புல்லட்டை சுடுவது, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்கு தீ வைக்கும்" என்று ஈரான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல், அபோல்பாஸ்ல் ஷெகார்ச்சி, தாஸ்னிம் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அதிரடியாக இன்று, தெரிவித்துள்ளார்.
"எதிரி - குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்த பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகள் - ஈரானை நோக்கி துப்பாக்கியை நீட்டினால், இந்த மண்டலமே தீப்பிழம்பாகும்" என்று ஷெகார்ச்சி எச்சரித்தார்.
ஈரானின் இந்த எச்சரிக்கை, எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவதை போல மாறியுள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே, இந்திய விமானங்கள், ஈரான் வான் எல்லையை பயன்படுத்துவதில்லை என்று இன்று முடிவு செய்துள்ளன. அமெரிக்க விமானங்கள் நேற்று இம்முடிவை எடுத்தன.