தொற்றுநோயால் பறி போன 2 கைகளுக்கும் மாற்றாக புதிய கைகள் பொருத்தப்பட்ட அமெரிக்க சிறுவன்
நியூயார்க்: அமெரிக்காவில் தொற்றுநோய் காரணமாக கைகளை இழந்த எட்டு வயது சிறுவனின் இரண்டு கைகளும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஜியான். தொற்றுநோய் காரணமாக இவனது இரண்டு கைகள் மற்றும் பாதங்கள் அகற்றப்பட்டன. ஜியானுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கைகள் இல்லாமலே எழுதப் படிக்க என தனது மீதி வாழ்க்கையை வாழ்ந்து வந்தான் ஜியான்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் ஜியானுக்கு மாற்று கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்றது. சுமார் 40 மருத்துவர்கள் கொண்ட குழு, 10 மணி நேரம் போராடி இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
தற்போது தனது புதிய கைகளைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்துள்ளான் ஜியான்.
இந்த அறுவைச் சிகிச்சை மூலம், உலகிலேயே மிகவும் இளம் வயதில் இரு கைகளும் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்ற பெருமையை ஜியான் பெற்றுள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் முதன்முதலாக கைகள் மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.