மனிதனின் மரணத்திற்குப் பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலுமாம்!
நியூயார்க்: மரணித்தாலும் உன் நினைவுகளால் உயிர்பிழைப்பேன் என்று கவிஞர்கள் கூறுவார்கள். ஆனால் அது உண்மைதான் போலிருக்கிறது. மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மனிதன் மரணத்தின் போது மூளையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்று விடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சுழலும் நினைவுகள்
ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணத்தில் இருந்து மீண்டனர்
இந்த நினைவுகள் ஒருவரை மரணத்தில் இருந்தும் கூட காத்திருக்கிறதாம். இதனை ஆய்வு ரீதியாக நிரூபித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
விஞ்ஞானிகள் ஆய்வு
இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 அண்டுகளாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இருதய துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 40 சதவீதம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
உயிர் பிழைக்க காரணம்
அப்போது, இருதய துடிப்பு அடங்கிய பிறகு 3 நிமிடங்கள் தங்களது நினைவலைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் இருந்ததாகவும் அதுவே நாங்கள் மீண்டும் உயிர் பிழைக்க காரணமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
மரணத்தின் மாயத்தோற்றம்
நியூயார்க் பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், சவுதாம்ப்டன் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சியாளருமான டாக்டர் சாம்பர்னியா தனது ஆய்வு அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
மாண்டவர்கள் மீண்டனர்
மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டவர்கள் தங்களுக்கு மாய தோற்றம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர் என்றார்.