இன்னும் பத்தே வருஷம்தான்.. இறந்தவர்களை உயிரோடு எழுப்பலாம்! உலகை உற்று நோக்க வைக்கும் தொழில்நுட்பம்
Recommended Video
வாஷிங்டன்: மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையின்பேரில், இறந்துபோனவர்கள் சடலத்தை பதப்படுத்தி வைக்கும் கடும்குளிர் (cryogenics) டெக்னாலஜி மீது உலகில் பலரின் கவனமும் பதியத்தொடங்கியுள்ளது.
இதுவரை உலகில் சுமார் 350 பேரின் இறந்த உடல்கள் இவ்வாறான தொழில்நுட்பத்தின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள கிரையோனிக்ஸ் என்ற இன்ஸ்ட்டிடியூட் இந்த வகை பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது.
10 வருடம் போதும்
கிரையோனிக்ஸ் அமைப்பின் தலைவர் டென்னிஸ் கோவல்ஸ்கி இதுபற்றி கூறுகையில், அடுத்த 10 வருடங்களுக்குள் விஞ்ஞானிகள் நாங்கள் பதப்படுத்தி வைத்துள்ள உடல்களுக்கு உயிர் கொடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறார். 49 வயதாகும், கோவல்ஸ்கி 'டெய்லி ஸ்டார்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "சிபிஆர் தொழில்நுட்பம் பற்றி 100 வருடங்கள் முன்பு யாரும் நம்பியிருக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று அது நடைமுறையில் உள்ளது. அதேபோலத்தான், 100 வருடங்களுக்குள் கண்டிப்பாக, உடல்களுக்கு மீண்டும் முழுமையாக உயிர் கொடுக்கும் அறிவியல் வரும்" என்கிறார் ஆணித்தரமாக.
மக்கள் ஆர்வம்
இவரது கிரையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில், சுமார் 2,000 பேர் தங்களது மரணத்திற்கு பிறகு உடலை பத்திரப்படுத்தி வைக்குமாறு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர் என்பது வியப்பூட்டுகிறது. இந்த அமைப்பில் ஏற்கனவே 160 உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மருந்து கண்டுபிடித்தால் பிழைப்பார்கள்
கோவல்ஸ்கி கூறுகையில், எந்த உடல் முதலில் உயிர்பெறும் என்பது, இதற்கு தேவையான அறிவியல் மருந்து எந்த அளவு வேகமாக கண்டுபிடிக்கப்படுகிறதோ, அதன் அடிப்படையில் அமையும். குறிப்பாக ஸ்டெம் செல்ஸ் டெக்னாலஜி எந்த அளவுக்கு வேகமாக வளர்கிறதோ அந்த வேகத்தில் மீண்டும் உடல்களுக்கு உயிர் கொடுக்க முடியும் என்றார்.
கிரையோஜெனிக்ஸ் என்றால் என்ன?
ஒரு மனிதனின் இதயத் துடிப்பு நின்று அவன் இறந்துவிட்டதாக அறிவித்த 2 நிமிடங்களுக்குள், கடுங்குளிர் தொழில்நுட்பம் எனப்பதும் கிரையோஜெனிக்ஸ் டெக்னாலஜி வல்லுநர்கள் தங்களது வேலையை ஆரம்பிப்பார்கள். அந்த சடலத்தின் உடலில் இருந்து ரத்தம் வெளியேற்றப்பட்டு, அதற்கு பதிலாக வேறு ஒரு கெமிக்கல் உடலில் ஏற்றப்படும்.
கடும்குளிர் டெக்னாலஜி
செல்கள் சேதமடையாமல் இருக்க உடலுக்குள் ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும். இதன்பிறகு சடலம் மைனஸ் 130 டிகிரி குளிரில் வைக்கப்படும். இதன்பிறகு, நைட்ரஜன் அடைக்கப்பட்ட கன்டெய்னரில் சடலம் மைனஸ் 196 டிகிரி செல்சியசில் வைக்கப்படும். இதன்பிறகு அறிவியலாளர்கள் செல்களை புதுப்பிக்கும் டெக்னாலஜியை கண்டுபிடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இதுதான் கிரையோஜெனிக்ஸ் டெக்னாலஜி செயல்படும் விதமாகும்.
விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
இந்த நடைமுறையில் சடலங்களுக்கு மீண்டும் உயிர் கிடைக்குமா என்று விஞ்ஞானிகளிடம் கேட்டால் அவர்களிடமிருந்து, இல்லை என்ற பதில் சத்தமாக வருகிறது. கிட்னி, இதயம் போன்றவற்றை என்னதான் பதப்படுத்தினாலும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது எனந்பது அவர்கள் வாதம். மூளையும் சேதமடையும் என்கிறார்கள் நிபுணர்கள்.
செம பிசினஸ்
இவ்வாறு கடுங்குளிரில் உடலை பதப்படுத்த கிரையோனிக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் 35,000 அமெரிக்க டாலர்களை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. போட்டி நிறுவனம் அல்கோர் 2,00000 அமெரிக்க டாலர்களை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. க்ரியோரஸ் ப்ரசிஜர் என்ற அமைப்பு, 37,600 அமெரிக்க டாலர்களை கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
கருத்து மோதல்
உடலை பதப்படுத்தும் அமைப்புகள், மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்து இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க நூற்றாண்டுகளும் ஆகலாம், பத்தாண்டிலும் நடக்கலாம் என கூறுகின்றன. மருத்துவ நிபுணர்களோ, செல் ஒருமுறை சேதமடைந்துவிட்டால் மீண்டும் அதை புதுப்பிக்க முடியாது என்கிறார்கள். உடைந்த முட்டையை மீண்டும் முந்தைய நிலைக்கே மாற்றுவதை போன்று அது இயலாத விஷயம் என்று உதாரணம் கூறுகிறார்கள் நிபுணர்கள்.