”இலங்கை போர்க்குற்றங்கள்” குறித்த அமெரிக்க தீர்மானத்தின் வரைவு அறிக்கை வெளியீடு
ஜெனீவா: ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை குறித்து அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது வரும் 30 ஆம் தேதி விவாதம் நடைபெற உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், ஐக்கிய நாடுகள் அவையில், மனித உரிமைகள் ஆணையத்தின் 30ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டம், அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தீர்மானத்தில், "சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு உருவாக்க வேண்டும். அதிகாரப்பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காண இலங்கை திட்டமிட வேண்டும்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ராணுவத்தை அகற்ற வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்க உள்நாட்டு சட்டத்தை திருத்த வேண்டும்.
ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். 13ம் சட்டத்திருத்தத்தின்படி மாகாணங்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பு படையினரின் மனித உரிமை மீறலை வெளியிட வேண்டும். காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு சான்று வழங்க வேண்டும். உண்மை கண்டறியும் குழுவினரின் பரிந்துரைகளை ஏற்க வேண்டும்" ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.