அணுக்கதிர் வீச்சால் அதீத வளர்ச்சியில் மீன்கள்? - சந்தேகத்தின் பிடியில் ஜப்பான் மக்கள்
டோக்கியோ: ஜப்பானில் அணு உலை கதிர்வீச்சால் மீன்கள் கூட உருமாறி வருவதாக மக்கள் சந்தேகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
ஜப்பானிய மீனவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்கவே பயங்கரமாக இருப்பதால் புகுஷிமா அணு உலை சிதறியதால் பாதிக்கப்பட்டு அது இவ்வாறு உருமாறியிருக்குமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜப்பானில் டால்பின் மீன்களை பிடிக்கும் சீசன் இம்மாதம் முதல் தொடங்கியுள்ளது.
ஆறடி உயர மீன்:
இந்நிலையில் சமீபத்தில் ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒருவரின் வலையில் சுமார் ஆறடி உயரத்தில் பெரிய மீன் ஒன்று சிக்கியது.
வேற்றுகிரக வாசி தோற்றம்:
இந்த மீனின் வித்தியாசமான உருவ அமைப்பு, இது மீன்தானா? அல்லது வேற்றுலக வாசியா? இல்லாவிட்டால் புக்குஷிமா அணு உலை சிதறியதால் ஏற்பட்ட மாற்றமா? என இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரை பீதியடைய வைத்துள்ளது.
உல்ஃப் மீனின் வளர்ச்சி:
எனினும், இது "உல்ஃப்" மீன் வகை என ஒருதரப்பினர் கூறிவருகின்றனர். பொதுவாக உல்ஃப் மீன்கள் 4 அடி வரை வளரும், இந்த மீனின் அதீத வளர்ச்சியே மக்களை பீதியடைய வைத்துள்ளது.
ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள்:
இந்த மீனின் அதீத வளர்ச்சிக்கான காரணத்தை தற்போது ஆய்வு செய்து கண்டறியும் முயற்சியில் ஜப்பானிய மீன்வளத்துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.