ஜாவா கடலில் குண்டுவெடித்தது போல் சப்தம்.. பல அடி உயரம் சீறிய அலைகள்.. நடந்தது என்ன?.. மீனவர்கள்
ஜகார்த்தா: ஜாவா கடற்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் ஏதோ குண்டுவெடித்தது போன்ற சப்தம் கேட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து பார்னியோ தீவில் உள்ள பாண்டியநாக்கிற்கு ஸ்ரீவிஜயா எஸ்ஜே 182 என்ற போயிங் விமானம் நேற்று மதியம் 2.36 மணிக்கு புறப்பட்டது.
மத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்க தேமுதிக கூட்டணி ராசிதான் காரணம்.. பிரேமலதா பொளேர்
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான கண்காணிப்பை இழந்தது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 59 பேர் இருந்தனர். இது மாயமானதாக தேடப்பட்டு வந்த நிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதை இந்தோனேஷிய விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.
இடம் ஒத்து போனது
இதுகுறித்து இந்தோனேசிய ராணுவத் தளபதி ஹாடி ஜாஜன்டோ கூறுகையில் கடற்படையினர் அந்த விமானத்தின் சிக்னலை கண்டுபிடித்துள்ளனர். அந்த சிக்னலும் விமானம் விபத்துக்குள்ளான போது விமானிகள் இறுதியாக தொடர்பு கொண்ட இடமும் ஒன்றோடு ஒன்று ஒத்து போகிறது.
12 மணி நேரத்திற்கு மேல்
இதையடுத்து நீர் மூழ்கும் வீரர்களை இறக்கி விமான பயணிகளை தேடி வருகிறோம். விமான விபத்து நிகழ்ந்து 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. ஆனால் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என தெரியவில்லை என்றார். இதுகுறித்து நேரில் பார்த்த மீனவர்கள் அதிகாரியிடம் சில தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.
குண்டுவெடித்தது
அதில் ஜகார்த்தா கடற்கரையின் வடக்கு பகுதியில் ஆயிரம் தீவுகள் பகுதி அருகே நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது சனிக்கிழமை மதியம் 2.40 மணிக்கு கடலில் ஏதோ குண்டுவெடித்தது போன்ற ஒரு சப்தத்தை கேட்டோம்.
சுனாமியா
அது குண்டுவெடிப்பா இல்லை சுனாமியா என தெரியாமல் குழப்பத்தில் இருந்தோம். கடல் அலைகளும் ஆக்ரோஷமாக உயர்ந்தன. அப்போது கனமழை பெய்து வந்தது. அதனால் எங்களால் என்ன சப்தம் என்பதை தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து எங்கள் படகுக்கு அருகே விமான பாகங்களும், விமான எரிப்பொருளும் மிதப்பதை கண்டோம்.
துண்டிப்பு
அப்போதுதான் ஏதோ ஒரு விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்தோம் என்றனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் புறப்பட்ட 4 நிமிடங்களிலேயே ராடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்படும் போது 8,839 மீட்டர் உயரத்தில் பறந்தது.