கொலம்பியாவில் பேக்கரி மீது விழுந்த குட்டி விமானம் - 5 பேர் பலி; 6 பேர் படுகாயம்
பொகோடா: கொலம்பியாவில் குட்டி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொலம்பியாவில் தலைநகர் பொகோடோவில் உள்ள எல்டொரடோ விமான நிலையத்தில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. அதில் விமானி உள்பட 5 பேர் பயணம் செய்தனர்.
அந்த விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் குயாமரல் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் பேக்கரி மீது விழுந்து நொறுங்கியது. இதனால் பேக்கரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் உடல் கருகி பலியாகினர். விமானம் விழுந்ததில் பேக்கரி கட்டிடம் இடிந்து தீப்பிடித்தது. அப்போது அங்கு பணியில் இருந்த 6 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது. கொலம்பியாவில் அதிக அளவில் இது போன்று விமான விபத்துக்கள் நடக்கின்றன.
இது பொகோடாவில் கடந்த மாதங்களில் நடந்த 3 ஆவது விபத்தாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் கஜிராக பகுதியில் நடந்த குட்டி விமான விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் மாதம் ஏற்பட்ட விபத்திலும் 3 க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.