'யுனிசெப்' பெயரில் ரூ.3 லட்சத்தை பயணிகளிடம் வசூலித்து அபேஸ் செய்த விமான சிப்பந்தி
நியூயார்க்: யுனிசெப்புக்கு அளிக்கவிருந்த நிதித் தொகையை திருடிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சிப்பந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான சிப்பந்தியாக இருந்தவர் மார்கோ காஸ்டா(56). அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஐ.நா. அமைப்பின் குழந்தைகள் நலனுக்கான பிரிவான யுனிசெப்புடன்(UNICEF) பார்ட்னராக உள்ளது. இதனால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சிப்பந்திகள் யுனிசெப்புக்காக பயணிகளிடம் நன்கொடை வசூலித்து வருகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மார்கோ 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பயணிகளிடன் காசாக வசூலித்த நிதியை யுனிசெப்பிடம் அளிக்காமல் நியூயார்க்கில் உள்ள கென்னடி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது கார் டிக்கியில் சேமித்து வந்தார். அவர் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நாட்டு நாணயங்களை பயணிகளிடம் இருந்து பெற்று தனது காரில் வைத்திருந்தார்.
காரின் பின்புறம் வழக்கத்திற்கு மாறாக தாழ்வாக இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் அதை திறந்து பார்த்தால் மூட்டை மூட்டையாக நாணயங்கள் இருந்தது. அவரது காரில் இருந்து 317.5 கிலோ எடையுள்ள நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 31ம் தேதி காஸ்டாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.