'டைட்டானிக்'கை கண்டுபிடிக்க உதவிய கருவியை பயன்படுத்தி மலேசிய விமானத்தை தேட ஆஸி. திட்டம்
பெர்த்: கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை தேடிக் கண்டுபிடிக்க உதவிய கருவியை போன்ற ஒன்றை பயன்படுத்தி மாயமான விமானத்தை கண்டுபிடிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாயமான விமானத்தை பல நாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் தேடி வருகின்றன.
இந்நிலையில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலும் விமானத்தை தேடி வருகிறது.
தகவல் இல்லை
ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் கடலின் தரை பரப்புக்கு சென்று தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் மூலம் மலேசிய விமானம் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
அடுத்து
நீர்மூழ்கி கப்பலை நம்பி பலனில்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மலேசியா, சீனா மற்றும் அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா கலந்தாலோசித்து வருகிறது.
ஆழம்
அடுத்ததாக அதிக சக்திவாய்ந்த கருவியை பயன்படுத்தி மிகவும் ஆழமான பகுதிக்கு அதை அனுப்பி விமான பாகங்களை தேட வேண்டும் என்று ஆஸ்திரலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் ஜான்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
டைட்டானிக்
பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை தேட பயன்படுத்தப்பட்ட கருவி போன்ற ஒன்றை மாயமான விமானத்தை தேட பயன்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. அதிக சக்தி வாய்ந்த டோட் சைட் ஸ்கேன் கமர்ஷியல் சோனார் கருவியை பயன்படுத்தி(towed side scan commercial sonar equipment) விமானத்தை தேட உள்ளனர்.