விமானம் மூழ்கியது என்று எப்படி கூறுகிறீர்கள்?: மலேசியாவிடம் ஆதாரங்களை கேட்கும் சீனா
கோலாலம்பூர்: மாயமான விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று மலேசியா அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை அளிக்குமாறு சீனா மலேசியாவிடம் கேட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற விமானம் மாயமானது. அந்த விமானத்தை 2 வாரங்களாக 26 நாடுகள் தேடி வந்தன. இந்நிலையில் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்றும், அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்றும் மலேசிய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் விமானம் கடலில் விழுந்து மூழ்கியது என்று தீர்மானித்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் தங்களிடம் அளிக்குமாறு மலேசியாவிடம் சீன துணை வெளியுறவுத் துறை அமைசச்ர் ஜீ ஹாங்ஷெங் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் 154 பேர் சீனர்கள். பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக மலேசியா அறிவித்தவுடன் அதை கேட்ட சீன பயணிகளின் உறவினர்கள் கதறி அழுதனர்.
முன்னதாக தெற்கு இந்திய பெருங்கடலில் பொருட்கள் கிடப்பதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் பார்த்தபோதே அதை நம்ப சீன பயணிகளின் உறவினர்கள் மறுத்தனர். விமானம் கடலில் மூழ்கவில்லை என்றும், தங்களின் உறவினர்கள் உயிருடன் தான் உள்ளனர் என்றும் அவர்கள் நம்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.