ஹைதி கலாச்சார திருவிழாவில் சோகம்: மின்சாரம் தாக்கி 20 கலைஞர்கள் பலி - 46 பேர் காயம்
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதி நாட்டில் நடந்த கலாச்சார திருவிழாவில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், இசைக்கலைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதி நாட்டில் ஆண்டு தோறும் நடக்கும் கலாச்சார திருவிழா நடைபெறுவது வழக்கம். அதில், பல்வேறு நடன கலைஞர்கள் பேரணியாக அணிவகுத்து செல்வர்.
அதன்படி, இந்தாண்டிற்கான கலாச்சார திருவிழா தலைநகர் போர்ட் ஆப்பிரின்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் வழக்கம் போல கலைஞர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் பேரணி, டவுன்டவுன் தெரு அருகே வந்த போது தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின்சாரத்தினை ஒருவர் தவறுதலாக தொட்டுவிட்டதாகக் கூறப் படுகிறது.
இதனால், அவர் மீது பாய்ந்த மின்சாரம், அருகில் இருந்தவர்கள் மீதும் தாக்கியது. இதில் 20-க்கும் மேற்பட்டார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி பலியானவர்கள் இசைக்கலைஞர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 46 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இந்தத் துயர சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப் படுகிறது.
மகிழ்ச்சியாக தொடங்கிய கலாச்சார திருவிழாவில், எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்து , திருவிழாவை கொண்டாட குவிந்த மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.