அந்தோ பாவம்: பெற்ற மகளை திருடன் என தவறாக நினைத்து சுட்டுக் கொன்ற தாய்
நியூயார்க்: அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது மகளை திருடன் என தவறாக நினைத்து சுட்டுக் கொன்றுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓஸ்சிலோ கவுன்ட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வடக்கு கரோலினாவில் வசித்து வந்த அவரின் 27 வயது மகள் தாயை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் வீட்டிற்குள் நுழைந்த சப்தம் கேட்டு கண்விழித்த பெண் திருடன் வந்துவிட்டதாக நினைத்து தனது துப்பாக்கியை எடுத்து சுட்டார். குண்டடிபட்டு தரையில் விழுந்தது தனது மகள் என்பது தெரிந்த பிறகு அந்த பெண் வேதனையில் துடித்தார். மகளிடன் ஐ லவ் யூ என்று கூறினார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி பலியானார். பலியான பெண்ணின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இது போலீஸ் அதிகாரியின் வீட்டில் நடந்த சம்பவம் என்பதால் பலியானவரின் பெயர் மற்றும் அவரை துப்பாக்கியால் சுட்டவரின் பெயரை வெளியிட வேண்டாம் என செயின்ட் கிளவுட் காவல் துறை பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொண்டது.
பலியான பெண்ணுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.