ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை
புதன்கிழமையன்று ஃபுளோரிடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சுமத்தப்பட்ட பதின்ம வயது நபர் குறித்து முன்பே எழுந்த எச்சரிக்கையை தாங்கள் கையாண்ட விதம் குறித்து எஃப்பிஐ மதிப்பாய்வு செய்து வருகிறது.
19 வயதாகும் நிக்கோலஸ் குரூஸ் திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க பள்ளியில் நடைபெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும்.
இது குறித்த முந்தைய செய்தி: அமெரிக்கா: பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி
தான் "தொழில்முறையாக பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தும் நபராகப் போவதாக" குருஸ் முன்னர் யூ ட்யூப் பதிவு ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதுகுறித்து பயன்பாட்டாளர் ஒருவர், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ததாகவும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
குரூஸ் பற்றி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அவர் பள்ளி வளாகத்திற்குள் பையுடன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாங்கள் யூ ட்யூப் பதிவை ஆராய்ந்ததாகவும் ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியாமல் போனதாகவும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
ஃபுளோரிடாவில், பார்க்லாண்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர், அதில் மூன்று பெண்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.
வியாழனன்று குரூஸ் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதை ஒப்புக் கொண்டார். அவர் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும் தனது பையில் துப்பாக்கி தோட்டாக்களை வைத்திருந்ததாக விசாரணையாளர்களிடம் அவர் ஒப்புக் கொண்டார்.
தனது அனுதாபத்தை தெரிவித்திருந்த டொனால்ட் டிரம்ப், தான் பார்க்லாண்டிற்கு வருகை புரிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- பேட் மேனை தெரி்யும்; 'பேட் பாட்டி'யை பற்றி உங்களுக்கு தெரியுமா?
- தென்னாப்பிரிக்கா: புதிய அதிபரானார் சிரில் ராமபோசா
- 65 வயதை கடந்தவர்களுக்கு பாலுறவில் கூடுதல் விருப்பம்?
- இளம் வயதில் அனுபவித்த பாலியல் கொடுமை: போராடும் பெண்